முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் விதிக்கப்பட்டிருந்ததை போன்று அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதிக்கு மீண்டும் கட்டுப்பாடுகள் விதிப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஆங்கில ஊடகமொன்று அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவரை மேற்கோள்காட்டி குறித்த செய்தியை வெளியிட்டுள்ளது. செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மேற்கு ஆசியாவில் ஏற்பட்ட பிராந்திய மோதல்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை ரூபாயை நிலைப்படுத்தவும், தேவையற்ற செலவினங்களைக் கட்டுப்படுத்தவும் அரசாங்கம் பல மேலதிக நடவடிக்கைகளை எடுக்கவுள்ளது.
அதன்படி, .அத்தியாவசியமற்ற இறக்குமதிகளைக் கட்டுப்படுத்தவும், 2022 பொருளாதார நெருக்கடியின் போது எடுக்கப்பட்ட சில நடவடிக்கைகளை மீண்டும் நடைமுறைப்படுத்தவும் அரசாங்கம் திட்டமிடுகிறது.
வாகன இறக்குமதிகளை மட்டுப்படுத்துவவதற்கும், ரூபாயின் மீதான அழுத்தத்தைக் குறைப்பதற்கும் கடந்த வாரம் விதிக்கப்பட்ட வாகன சுங்க வரிகள் மீதான 50% கூடுதல் கட்டணத்தை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிப்பதும் இந்த நடவடிக்கைகளில் அடங்கும்.
தற்போது வர்த்தக வாகனங்களுக்கு 70% ஆகவும், தனியார் வாகனங்களுக்கு 50% ஆகவும் உள்ள வாகனங்களுக்கான கடன்-மதிப்பு வரம்பை அதிகரிப்பது குறித்தும் அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.
கடந்த ஆண்டு பெப்ரவரி முதல் வாகன இறக்குமதிக்காக மட்டும் கிட்டத்தட்ட 2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
2022 பொருளாதார நெருக்கடியின் போது நடைமுறைப்படுத்தப்பட்டது போலவே, அந்நியச் செலாவணியைச் சேமிப்பதற்காக அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியைக் கட்டுப்படுத்துவது குறித்தும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
கடுமையான அந்நியச் செலாவணிப் பற்றாக்குறையின் காரணமாகஇ மத்திய வங்கி 2022-ல் 367 'அத்தியாவசியமற்ற' பொருட்களின் இறக்குமதியைக் கட்டுப்படுத்தியது.
இவ்வாறு கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களில் வீட்டு உபயோக மின் சாதனங்கள், ஆடைகள், சுகாதாரப் பொருட்கள், விளையாட்டுப் பொருட்கள், அத்துடன் தலைமுடி மற்றும் உடல் பராமரிப்புப் பொருட்கள் ஆகியவை அடங்கும்.
மேலதிகமாக புதிய பழங்கள், மீன், பால் பொருட்கள், தானியங்கள், மாவு, மினரல் மற்றும் கார்பனேற்றப்பட்ட நீர், பீர், சைன் மற்றும் மதுபானம் போன்ற பரந்த அளவிலான உணவு மற்றும் பானங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இது தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தெரியவந்துள்ளது.
அந்நியச் செலாவணியை வெளிநாடுகளில் வைத்திருப்பதாலோ அல்லது அதனை இலங்கை ரூபாயாக மாற்றுவதில் ஏற்படும் தாமதத்தாலோ தற்போதைய நிலைமை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தற்போது அவர்கள் தங்களின் ஏற்றுமதி வருவாயை நாட்டிற்குள் கொண்டுவருவதையோ அல்லது மாற்றுவதையோ பல மாதங்களாகத் தாமதப்படுத்துகின்றனர்.
ஏற்றுமதி வருவாயை ஒரு மாதத்திற்குள் நாட்டிற்குள் கொண்டுவரவோ அல்லது மாற்றவோ கட்டாயப்படுத்தும் ஒரு சட்டத்தை இயற்ற நாங்கள் எதிர்பார்த்துள்ளோம்' என்றும் குறித்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.
