திருப்பதி அருகே நேற்று நடந்த பயங்கர சாலை விபத்தில் ஓசூரை சேர்ந்த 5 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இருவர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் விகாஸ் நகரைச் சேர்ந்த தியாகராஜன் குடும்பத்தினர் காரில் திருப்பதிக்கு வந்துள்ளனர். இவர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்து விட்டு, நேற்று மீண்டும் காரில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, திருப்பதி - சித்தூர் தேசிய நெடுஞ்சாலையில் சந்திரகிரி தோட்டபல்லி எனும் இடத்தில், அதிவேகமாக முன்னால் சென்ற ஒரு கண்டெய்னர் லாரியை முந்திச் செல்ல அந்தக் கார் முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது, எதிரே மற்றொரு வாகனம் வந்ததால், நிலை தடுமாறி, கண்டெய்னரின் பின்புறம் அந்த கார் வேகமாக மோதியது. இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த தியாகராஜன் உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இருவர் படுகாயமடைந்தனர்.
திருப்பதி மாவட்ட ஆட்சியர் வெங்கடேஸ்வர் மற்றும் எஸ்பி ஹர்ஷவர்தன் ராஜு மற்றும் போலீஸார் சம்பவம் நடந்த இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை முடுக்கி விட்டனர். அதன் பின்னர் காயமடைந்தவர்கள் திருப்பதி தேவஸ்தான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 5 சடலங்களை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக திருப்பதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும், காயமடைந்தவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கும்படியும் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து பாகாலா போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.