பெரம்பலூர் மாவட்டம் தொண்டமாந்துறை கிராமத்தில், சட்ட விரோதமாக ஆற்றில் மின்சாரம் பாய்ச்சி மீன் பிடிக்க முயன்ற இருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தொண்டமான்துறை கல்லாற்றில் மின்சாரம் செலுத்தி மீன் பிடிக்க முயன்ற போது ரஞ்சித்குமார் (30), தினேஷ் (28) ஆகிய இருவரும் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்துள்ளனர். கல்லாற்றின் அருகில் உள்ள மின் கம்பத்தில் இருந்து ஒயரை இணைத்து, தண்ணீரில் போட்டு மீன் பிடிக்க முயற்சித்தபோது இந்த விபத்து நடந்துள்ளது.
இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இப்பகுதியில் இதுபோல சட்ட விரோதமாக சிலர் மீன் பிடிப்பதாக ஊர் மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளிலும் நீர்நிலைகளில் மீன்கள் பெருகி உள்ளன. இந்நிலையில், பலரும் மீன் பிடித்து வருகின்றனர். இந்நிலையில் தான் ஆற்றில் மின்சாரம் பாய்ச்சினால் மீன்கள் செத்து மிதக்கும், அவற்றை அள்ளிச் செல்லலாம் என ஆசைப்பட்டு விபரீத செயலில் ஈடுபட்ட 2 இளைஞர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.