3 வருடமாக தகாத உறவில் இருந்த மனைவி-தட்டி கேட்ட கணவனுக்கு நேர்ந்த கொடூரம்..!
தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த கீரைப்பட்டியை சேர்ந்தவர் ரசூல், 43; லாரி டிரைவர். இவரது மனைவி அம்முபி, 35. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.
கடந்த, 5ம் தேதி இரவு ரசூல் வீட்டில் சாப்பிட்டு விட்டு துாங்கிய நிலையில், அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டது.
அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்நிலையில் கடந்த, 11ல் சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு ரத்த மாதிரிகளை பரிசோதித்த மருத்துவர்கள், அதில் பூச்சி கொல்லி மருந்து கலந்துள்ளதாக தெரிவித்தனர். இதனால், மனைவி மீது சந்தேகமடைந்த ரசூல், தன் தம்பி மனைவி அசினாவிடம், மனைவியின் மொபைல்போனை சோதனை செய்யுமாறு கூறியுள்ளார்.
அதில், கீரைப்பட்டியில் சலுான் கடை நடத்தி வரும் லோகேஸ்வரன், 26, என்பவருடன், அம்முபி வாட்ஸாப்பில் பேசிய ஆடியோவில், 'நீ கொடுத்த மருந்தை என் கணவருக்கு உணவில் கலந்து கொடுத்தேன்; ஒன்றும் ஆகவில்லை. மறுபடியும் மாதுளை பழச்சாறில் கலந்து கொடுத்தேன்' என, கூறியுள்ளார்.
இது குறித்து ரசூல் அளித்த புகார்படி, அரூர் போலீசார் கொலை முயற்சி வழக்குப் பதிந்து கடந்த, 16ல், லோகேஸ்வரன், அம்முபியை கைது செய்தனர்.
இந்நிலையில், சேலம் தனியார் மருத்துவமனையில் இருந்து, மேல் சிகிச்சைக்காக நேற்று முன்தினம் சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரசூல், நேற்று அதிகாலை உயிரிழந்தார்.
இதையடுத்து, லோகேஸ்வரன், அம்முபி மீது போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அம்முபி வீடு அருகில் லோகேஸ்வரன் வீடு இருந்துள்ளது. இருவருக்கும் மூன்று ஆண்டுகளாக தகாத உறவு இருந்துள்ளது.
அம்முபி பெயரை லோகேஸ்வரன் தன் நெஞ்சில் பச்சை குத்தியுள்ளார். இந்நிலையில், 20 நாட்களுக்கு முன், முடித்திருத்தம் செய்வதற்காக லோகேஸ்வரன் கடைக்கு ரசூல் சென்றுள்ளார்.
அப்போது, அம்முபி, லோகேஸ்வரனுக்கு வீடியோ கால் செய்துள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த ரசூல், லோகேஸ்வரனை அடித்ததுடன், வீட்டிற்கு வந்து மனைவியையும் அடித்துள்ளார்.
இதனால் அம்முபி, லோகேஸ்வரன் இருவரும் சேர்ந்து ரசூலை கொல்ல முடிவு செய்துள்ளனர். லோகேஸ்வரன் வாங்கி கொடுத்த பூச்சிக்கொல்லி மருந்தை, ஐந்து முறை உணவில் கலந்து அம்முபி கணவருக்கு கொடுத்துள்ளார்.
உணவை குழந்தைகள் சாப்பிடாததால், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி உள்ளனர். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
அம்முபியிடம் இருந்து போலீசார் கைப்பற்றிய மொபைல்போனில், லோகேஸ்வரனும், அம்முபியும் தனிமையில் நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள் மற்றும் அவர்கள் பேசிய ஆடியோக்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
We use cookies to understand preferences and optimize your experience using our site, this includes advertising affiliated with Google.