சிவகங்கை மாவட்டம், மாத்தூர் ஊராட்சிக்குட்பட்ட நாட்டாகுடி கிராமத்தில் அடுத்தடுத்து நடந்த இரு மர்மக் கொலைகள் காரணமாக மக்கள் அச்சத்தில் ஊரை காலி செய்துள்ளனர்.
100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்த இக்கிராமத்தில் குடிநீர், போக்குவரத்து போன்ற அடிப்படை வசதிகள் இல்லாததால் ஏற்கனவே பாதி மக்கள் வெளியேறியிருந்தனர்.

இந்நிலையில், கணேசன் மற்றும் சோனை முத்தன் ஆகியோர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மீதமிருந்த மக்களும் உயிர் பயத்தில் தங்கள் உடமைகளுடன் ஆடு, மாடுகளை எடுத்துக்கொண்டு ஊரை விட்டு வெளியேறினர்.
தற்போது ஒரு முதியவர் மட்டுமே கிராமத்தில் தனியாக வசிக்கிறார்.“என்னைப் பொறுத்தவரை இந்த ஊர் என் தாய் மண். உயிர் உள்ளவரை இங்கேயே இருப்பேன்,” என்கிறார் அந்த முதியவர்.
ஆனால், அரசியல்வாதிகள் வாக்கு சேகரிக்க மட்டும் வந்து, அடிப்படை வசதிகளோ பாதுகாப்போ வழங்கவில்லை என அவர் வேதனை தெரிவிக்கிறார். மாவட்ட நிர்வாகமும் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
கிராம மக்கள் உடனடியாக பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை வழங்கி ஊரை மீட்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.