கிளிநொச்சி பளை சோறன்பற்று பகுதியில் நேற்று (13) இரவு வீடு ஒன்றின் மீது கொடூரத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கிளிநொச்சி பளை சோறன்பற்று பகுதியில் அமைந்துள்ள பொன்னம்பலம் – சுதாகரன் எனும் குடும்பஸ்தரின் வீட்டிற்குள் நேற்று(13) இரவு 08.30 மணியளவில் இனம் தெரியாத நபர்கள் உள்நுழைந்துள்ளனர்.
முகத்தை மூடி மறைத்து கத்தி, வாள்கள், பெற்றோல் குண்டுடன் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் நான்கு நபர்கள் வீட்டிற்குள் தாக்குதலை மேற்கொள்வதற்காக அத்துமீறி நுழைந்துள்ளனர்.
வருகை தந்த நான்கு நபர்களில் ஒருவர் வீட்டின் வாசல் கதவுடன் நிறுத்தப்பட்டதுடன் ஏனைய மூவர்களும் கத்தி, வாள்களுடன் வீட்டுக்குள் நுழைந்து உடைமைகளை சேதமாக்கி தீயிட்டுள்ளனர்.
இதில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள், கதவுகள், கண்ணாடிகள், குளிர்சாதனப்பெட்டி, அலுமாரிகள், ஏனைய பெறுமதியான ஆவணங்களுடன் பெறுமதியான வீட்டு உபகரணங்களும் அடித்து நொருக்கப்பட்டு தீ வைக்கப்பட்டுள்ளது.
வீட்டில் இருந்தவர்கள் கூக்குரலிடத் தொடங்கியதும் தாக்குதலை மேற்கொண்ட நபர்கள் பெற்றோல் போத்தலையும் கைவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டதன் பிரகாரம் பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
