சென்னை, மதுரவாயில்: ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 30 வயது இளைஞர் அஜித், சென்னை மதுரவாயில் ஜானகி நகரில் வாடகை வீட்டில் தங்கி, வாநகரத்தில் உள்ள டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், வழக்கம் போல் வேலையை முடித்துவிட்டு இரவு பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்த அஜித்தை, வாநகரம் சுங்கச்சாவடி அருகே ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் வழிமறித்து அரிவாளால் சரமாரியாக தாக்கியது.
இதைத் தொடர்ந்து, மாங்காடு, மலையம்பாக்கம், பாடி, எருக்கஞ்சேரி, கொளத்தூர் பகுதிகளைச் சேர்ந்த விஷ்ணு, பிரவீண் குமார், மணி, பிரசாந்த், பிரவீண், சூர்யா ஆகிய ஆறு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
விசாரணையில், மாநகரம் பகுதியைச் சேர்ந்த திருநங்கை ரீட்டா, அஜித்தை கொலை செய்ய பணம் கொடுத்து இந்த கும்பலை அனுப்பியது தெரியவந்தது. ரீட்டாவையும் கைது செய்த காவல்துறையினர், அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின.
ஏழு ஆண்டுகளுக்கு முன்பு அஜித்துக்கும் ரீட்டாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, காதல் உறவாக மாறியது. அஜித், ரீட்டாவை காதலிப்பதாக கூறி அவரை அடிக்கடி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று நெருக்கமாக இருந்ததாக தெரிகிறது. கடந்த ஏழு ஆண்டுகளாக ரீட்டாவை காதல் என்ற பெயரில் உடலுறவுக்கு பயன்படுத்தி வந்துள்ளார் அஜித்.
ஆனால், சமீபத்தில் அஜித், வேறொரு பெண்ணை திருமணம் செய்யப் போவதாக ரீட்டாவிடம் தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த ரீட்டா, தனக்கு கிடைக்காத காதலன் யாருக்கும் கிடைக்கக் கூடாது என முடிவெடுத்து, கூலிப்படையை ஏவி அஜித்தை தாக்கியது விசாரணையில் தெரியவந்தது.
சம்பவத்தின்போது, அஜித் தலையில் ஹெல்மெட் அணிந்திருந்ததால், தலையில் காயம் ஏற்படாமல், கை மற்றும் கால்களில் மட்டுமே வெட்டுக்காயங்கள் ஏற்பட்டன.
காவல்துறையினர் இவ்வழக்கு தொடர்பாக மேலும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


