நீர்வீழ்ச்சிக்கு ஜாலியா டூர் போன பெண்: உயிரை கையில் பிடிச்சிட்டு 15 கிமீ காரை ஓட்டம்

 

நாசிக்கில் நீர்வீழ்ச்சி ஒன்றிற்கு ஜாலியாக டூர் போயிருக்கிறது ஒரு குடும்பம்.. அந்த சுற்றுலா ஸ்பாட்டில்தான் இந்த கொடுமை நடந்துள்ளது.. அடுத்த சில நிமிடங்களில் சினிமாவில் வருவதை போல சேஸிங் காட்சிகள், நாசிக் நெடுஞ்சாலையில் நடந்துள்ளது.. இது தொடர்பான வீடியோவும் பதிவாகி உள்ளது.. போலீசாரும் விசாரணையை நடத்தி கொண்டிருக்கிறார்கள்.. மகாராஷ்டிர மாநிலத்தில் என்ன நடநத்து?

நாசிக் அருகே உள்ளது அழகிய சுற்றுலாத் தலமான இகத்புரி பவ்லி அணை.. இந்த அணைக்கு பகவத் என்பவரது குடும்பத்தினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா போயிருக்கிறார்கள்.

அணையையும், நீர்வீழ்ச்சியையும், அந்த குடும்பத்தினர் ரசித்துக்கொண்டிருந்தபோது, அப்போது அங்கிருந்த சில நபர்கள் பகவத் குடும்பத்தில் இருந்த பெண்ணை பார்த்து விசில் அடித்து, ஆபாசமாக சைகை காட்டி, பாலியல் தொல்லை தந்துள்ளதாக தெரிகிறது.

இதனால் கோபமடைந்த பகவத், சம்பந்தப்பட்ட நபர்களிடம் ஏன் இப்படி செய்கிறீர்கள்?' என்று இதுகுறித்து தட்டிக்கேட்டிருக்கிறார. இப்படி கேட்டதுமே அந்த கும்பலுக்கு ஆத்திரம் அதிகமாகி, கையில் கிடைத்த மரக்கட்டைகள், இரும்பு கம்பிகளை எடுத்து, அக்குடும்பத்தினரை அடிக்கப் பாய்ந்துள்ளது.. இதனால் பயந்துபோன பகவத் குடும்பத்தினர், எப்படியாவது உயிர் பிழைத்தால் போதும் என்று தங்களது காரில் ஏறி தப்பியோட முயற்சி செய்துள்ளனர்.

ஆனால், அந்த கும்பலில் இருந்த 2 பேர் மட்டும் சும்மா விடவில்லை.. தங்கள் பைக்கில், அந்த காரையே விடாமல் விரட்டி கொண்டே வந்தனர்.. நள்ளிரவு நேரத்தில் ஆள்நடமாட்டமே இல்லாத நெடுஞ்சாலையில், சுமார் 15 கிலோமீட்டர் தூரத்திற்கு அந்த காரை பின்தொடர்ந்து விரட்டி வந்துள்ளனர்..

காரின் அருகில் வந்த 2 பேரும், கையில் கொண்டு வந்திருந்த மரக்கட்டைகளால் காரை நொறுக்கியிருக்கிறார்கள்.. காரின் முன் கண்ணாடியை இரும்பு கம்பிகளால் அடித்து உடைத்தனர்.. இதில் விண்ட்ஷீல்டு சுக்குநூறாக உடைந்துள்ளது.. இதைப்பார்த்து காரின் உள்ளே இருந்தவர்கள் பயத்தில் அலறியிருக்கிறார்கள். அப்போதும் ஆவேசம் அடங்காத 2 பேரும், காருக்குள் இருந்த பகவத் பெண்ணை அடித்து உதைத்து விட்டு, அதன்பிறகே அங்கிருந்து பைக்கில் தப்பி சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் அனைத்துமே, அந்த காரில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் அப்படியே பதிவாகியுள்ளது. இந்த அந்த வீடியோ ஆதாரத்தையும், அந்த பகுதியிலிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளையும் வைத்து நாசிக் போலீசார், தாக்குல் நடத்திய 2 பேரையும் தீவிரமாக தேடினார்கள்.. அடுத்த சில மணி நேரங்களிலேயே அவர்கள் 2 பேருமே பிடிபட்டனர்.

உடனடியாக சுற்றிவளைத்து அவர்களை கைது செய்த போலீசார், பாலியல் தொல்லை, கொலை முயற்சி போன்ற பிரிவுகளில் வழக்குகளையும் அவர்கள் மீது பதிவு செய்துள்ளனர். ஆனால், இந்த சம்பவத்தில் இன்னும் 7 பேருக்குத் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்படுகிறார்கள்.. அதனால் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

இதனிடையே, காரில் தாக்குதலுக்குள்ளான பெண், பலத்த காயங்கள் அடைந்து மயங்கி விழுந்துள்ளார்.. உடனே அவரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர்.. இப்போது அந்த பெண் சீரியஸாக இருக்கிறாராம்.. ஜாலியாக சுற்றுலாவுக்கு வந்த குடும்பத்தினர், இப்போது நிலைகுலைந்து போயுள்ளனர்.. தங்களுக்கு நேர்ந்த அந்த அதிர்ச்சியிலிருந்தும் இன்னும் அவர்களால் மீள முடியவில்லை..!!