மிசோரம் மாநிலத்தின் ஒரு சிறிய கிராமத்தில் நடந்த இந்த சம்பவம், குடும்ப உறவுகளின் பின்னால் மறைந்திருக்கும் இருண்ட பக்கங்களை அம்பலப்படுத்தியுள்ளது.
2025 டிசம்பர் மாதம், 32 வயதான லால்டின்புயி என்ற திருமணமான பெண், தனது இரு குழந்தைகளுக்கு புத்தாடை வாங்கி வருவதாகக் கூறி வீட்டை விட்டு வெளியேறினார். அன்று மாலை வரை அவள் திரும்பாததால் குடும்பம் பதற்றமடைந்தது. கணவர் வான்லால்ருவாயா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
தீவிர தேடல் வேட்டை தொடங்கியது. பல நாட்கள் கழித்து, அருகிலுள்ள காட்டுப்பகுதியில் எரிந்த நிலையில் ஒரு பெண் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த உடலின் வயதும், காணாமல் போன லால்டின்புயியின் விவரங்களும் ஒத்துப்போனதால், உடனடியாக கணவருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அடையாளம் காணும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர்.
சிறு வயதில் நடந்த விபத்தில் அவளது முழங்கைப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த உலோகத் தகடும் ஸ்க்ரூவும் அந்த உடலில் இருந்தன. அதை வைத்து, இறந்தவர் லால்டின்புயி தான் என்பதை காவல்துறை உறுதி செய்தது.
ஆனால் அதன் பிறகு விசாரணை முடங்கியது. அந்தக் காட்டுப்பகுதிக்கு அவளை யார் அழைத்துச் சென்றார்கள்? கடைசியாக யாருடன் பேசினாள்? எந்தத் தடயமும் கிடைக்கவில்லை.
அவளது கைபேசியை ஆய்வு செய்தபோது, உறவினர்கள் மற்றும் குழந்தைகள் படிக்கும் பள்ளி ஆசிரியர்களைத் தாண்டி வேறு யாருடனும் அவள் தொடர்பு கொண்டதற்கான ஆதாரம் இல்லை.
சிசிடிவி காட்சிகளில், கடைசியாக அந்தக் காட்டுப்பகுதிக்கு இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இருசக்கர வாகனத்தில் அவள் தனியாகச் செல்வது மட்டும் பதிவாகியிருந்தது. வேறு யாரும் அவளுடன் இல்லை.
குடும்பத்தினரிடம் சந்தேகம் குறித்து விசாரித்தபோது, “என் மனைவிக்கு இப்படி ஒரு கொடூரம் நடக்க அவள் எந்தத் தவறும் செய்யவில்லை. யாரும் அவளுக்கு எதிரி இல்லை” என்று கணவர் வான்லால்ருவாயா கண்ணீர் மல்கப் பேசினார்.
விசாரணை ஒரு கட்டத்தில் கணவரை நோக்கித் திரும்பியது. ஆனால் கிடைக்கும் ஆதாரங்கள் அனைத்தும் அவரை விடுவித்தன. சம்பவம் நடந்த நாளில் அவர் தனது பணியிடத்திலேயே இருந்தார். அவரது கைபேசி அழைப்புப் பதிவுகளிலும் சந்தேகத்திற்கு இடமளிக்கும் எதுவும் இல்லை. வழக்கு அப்படியே முடங்கிப் போனது.
ஏழு மாதங்கள் கழித்து, கடந்த சில தினங்களுக்கு முன் நிலைமை மாறியது. வான்லால்ருவாயா குடும்பம் வீட்டை முழுமையாகச் சுத்தம் செய்து பெயிண்ட் அடிக்கத் திட்டமிட்டிருந்தனர்.
ஒவ்வொரு அறையாகச் சுத்தம் செய்தனர். பாத்ரூம் பகுதியையும் சுத்தம் செய்தபோது, பரண் மீது வைக்கப்பட்டிருந்த பொருட்களை அகற்றும்போது, ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்ட நிலையில் ஒரு செல்போன் கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அதற்கு சார்ஜ் போட்டு ஆன் செய்தார். லாக் செய்யப்பட்டிருந்தது. ஆனால் லாக் ஸ்கிரீனில் தனது மனைவி லால்டின்புயியின் புகைப்படம் இருந்தது.
“இந்த போனை நான் வாங்கியதில்லை. மனைவி பயன்படுத்துவதை நான் பார்த்ததும் இல்லை. நம்முடைய பாத்ரூம் பரணுக்குள் இது எப்படி வந்தது?” என்று அதிர்ச்சியடைந்தார்.
குடும்பத்தினரிடம் விசாரித்தார். யாருக்கும் அந்த போன் பற்றித் தெரியவில்லை. சந்தேகம் அதிகரித்தது. “மனைவியின் மரணத்திற்கு இந்த போனில் ஏதேனும் தடயம் இருக்கலாம். குடும்பத்திற்குத் தெரியாமல் அவள் இதைப் பயன்படுத்தியிருக்கலாம்” என்ற எண்ணம் எழுந்தது.
உடனடியாக காவல் நிலையத்திற்குச் சென்று போனை ஒப்படைத்தார். “இது எங்கள் பாத்ரூமில் கிடைத்தது. மனைவியின் புகைப்படம் இருக்கிறது. ஆனால் லாக் செய்யப்பட்டுள்ளது. இதிலிருந்து உண்மை வெளிவர வாய்ப்புள்ளது” என்றார்.
காவல்துறை வழக்கை மீண்டும் தொடங்கியது. கிட்டத்தட்ட பத்து நாட்கள் கழித்து, அந்த போன் வெற்றிகரமாக மீட்டெடுக்கப்பட்டது. அதில் இருந்த தகவல்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கின.
லால்டின்புயி தனது கல்லூரிக் கால நண்பரான லால்நுன்ட்லுவாங்குடன் அடிக்கடி பேசி வந்தது தெரியவந்தது. உடனடியாக அந்த நபர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார். அப்போதுதான் குலைநடுங்க வைக்கும் உண்மைகள் வெளியாயின.
லால்நுன்ட்லுவாங், லால்டின்புயியை விவாகரத்து செய்துவிட்டு தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்திருக்கிறார். ஆனால் குழந்தைகளும் குடும்பமும் இருப்பதால் அவள் மறுத்துவிட்டாள்.
“நான் உன்னைத் திருமணம் செய்ய மாட்டேன்.தனிமையில் சந்திப்பதோடு நம்முடைய பழக்கம் நிற்கட்டும்” என்று அவள் தெளிவாகச் சொல்லியிருக்கிறாள். ஒரு கட்டத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரத்திலும் இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது.
வழக்கமாக சந்திக்கும் அந்தக் காட்டுப்பகுதிக்கு அவள் வந்தபோது, வாக்குவாதம் முற்றி, அவர் அவளைக் கடுமையாகத் தாக்கியிருக்கிறார். மயக்கமடைந்த பிறகு, அவளது இருசக்கர வாகனத்தில் இருந்த பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றிருக்கிறார்.
சம்பவம் நடந்த இடத்தில் அவளது வாகனம் காணாமல் போனது குறித்து விசாரித்தபோது, அருகிலுள்ள கிணற்றில் தள்ளிவிட்டதாக அவர் ஒப்புக்கொண்டார். காவல்துறையினர் அந்தக் கிணற்றுக்குச் சென்று பரிசோதித்தபோது, பாசி பிடித்த நிலையில் அந்த இருசக்கர வாகனம் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த சம்பவம் மிசோரம் பகுதியை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குடும்பத்திற்குத் தெரியாமல், எந்தச் சந்தேகமும் இல்லாமல், கல்லூரிக் கால நண்பன் என்ற அடிப்படையில் பழக்கம் வைத்திருந்த ஒரு பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் இது.
குடும்ப உறவுகளை மீறி, ரகசியமாக ஒரு உறவை வைத்திருக்கும்போது அது எவ்வளவு பெரிய சோகத்தில் முடியும் என்பதற்கு இந்த வழக்கு ஒரு எச்சரிக்கையாக மாறியுள்ளது. விசாரணையை முடித்த காவல்துறையினர், கொலைக்குக் காரணமான லால்நுன்ட்லுவாங்கை சிறையில் அடைத்துள்ளனர்.
