கனேடிய குடிமக்கள் அல்லது கனடாவில் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெற்றவர்கள், தங்கள் பெற்றோர், தாத்தா, பாட்டியை 'ஸ்பான்சர்' செய்யும் திட்டத்தை கனடா அரசு காலவரையறையின்றி நிறுத்தியுள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு கனேடிய குடிமக்கள் அல்லது கனடாவில் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெற்றவர்கள், தங்கள் பெற்றோர், தாத்தா, பாட்டியை 'ஸ்பான்சர்' செய்யும் திட்டத்தை கனடா அரசு அறிமுகம் செய்தது.
அதைத் தொடர்ந்து, அந்த நேரத்தில் சுமார் 200,000 பேர் தங்கள் பெற்றோர், தாத்தா, பாட்டியை 'ஸ்பான்சர்' செய்ய விருப்பம் தெரிவித்தனர்.
இந்நிலையில், தற்போது அந்த திட்டம் காலவரையறையின்றி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கனடா ஃபெடரல் அரசின் புலம்பெயர்தல் துறை அறிவித்துள்ளது.
அதாவது, 'ஸ்பான்சர்' செய்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள இடங்களின் எண்ணிக்கையை விட, மிக அதிகமானோர் 'ஸ்பான்சர்' செய்ய விண்ணப்பித்துள்ளனர் என புலம்பெயர்தல் துறை தெரிவித்துள்ளது.
ஏற்கனவே 60,500 விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ள நிலையில், அவற்றைச் செயல்படுத்துவதற்கான காத்திருப்பு காலம் சுமார் 33 மாதங்கள் ஆகும். கியூபெக்கிலோ 66 மாதங்கள் வரை ஆகலாம்.
இந்த நிலையில், தாத்தா, பாட்டியை ஸ்பான்சர் செய்யும் திட்டத்தை பொறுப்புடன் நிர்வகிப்பதற்காகவும், காத்திருப்பு காலத்தைக் குறைப்பதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கனடா ஃபெடரல் அரசின் புலம்பெயர்தல் துறை தெரிவித்துள்ளது.
