இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஒரே இளைஞரை மூன்று சகோதரிகள் திருமணம் செய்துகொண்டதாக வெளியான தகவல், சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
அம்ரோகா மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் மகள்களான சரோஜ், சாவித்ரி மற்றும் சந்தோஷி ஆகிய மூவரும் ஒரே இளைஞரைத் திருமணம் செய்ய முடிவுசெய்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, அந்த பகுதியில் உள்ள சாமுண்டா கோயிலில் நடைபெற்ற நிகழ்வில் மூன்று சகோதரிகளும் அந்த இளைஞரைத் திருமணம் செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
திருமணச் சடங்குகளின்போது அவர்கள் அக்னியை வலம்வந்ததோடு, ஒருவருக்கொருவர் குங்குமம் வைத்து, பெரியவர்களிடம் ஆசீர்வாதமும் பெற்றுக்கொண்டனர்.
இந்தத் திருமண நிகழ்வின் காணொளிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகப் பரவின.
ஆரம்பத்தில் இது சமூக வலைதளப் பதிவிற்காக உருவாக்கப்பட்ட காணொளி எனப் பலர் கருதிய நிலையில், பின்னர் அந்த திருமணம் உண்மையில் நடைபெற்றதுதான் எனச் சம்பந்தப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
திருமணமான நால்வரும் சமூக வலைதளங்களில் காணொளிகளை வெளியிட்டு, தங்களது திருமணம் உண்மையானது என உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்துச் சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்களும் காரசார விவாதங்களும் எழுந்துள்ளன.
