வேலூரில் தொடங்கி திருவண்ணாமலையில் முடிந்த வாழ்வு! தனிமையில் இதைதான் தம்பதி பேசினார்களா?

 

வேலூருக்கு சென்ற திருவண்ணாமலை தம்பதியர், அங்கிருந்து திரும்புவதாக சொல்லிவிட்டு, நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வரவில்லையாம்.. எப்போது வருவார்கள் என்று உறவினர்களும் ஆவலோடு காத்திருந்தார்கள்.. ஆனால் தம்பதி தங்கியிருந்த இடமும் அவர்கள் மேற்கொண்ட அந்தத் திடீர் பயணமும் அனைவரையும் அதிர்ச்சியில் உறையவைத்துள்ளது. இந்த செய்திதான் ஆரணியை அதிர வைத்து வருகிறது.

திருவண்ணாமலையை அடுத்துள்ளது நல்லாம்பாளையம்.. இங்கு வசித்து வருபவர் சந்திரகுமார்.. 42 வயதாகிறது.. இவர் அரியானா மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைஸராக வேலை பார்த்து வருபவர். இவரது மனைவி பெயர் சிந்து.. 38 வயதாகிறது.. இவர்களுக்கு 10ம் வகுப்பு படிக்கும் மகன் ஒருவன் உள்ளான். இவர்கள் அனைவரும் மகிழ்ச்சியாகவே வாழ்ந்து வந்தனர்..

ஆனால் கடந்த மாதங்களுக்கு முன்பு சந்திரகுமாருக்குத் திடீரென நுரையீரல் தொற்று பாதிப்பு ஏற்பட்டது. வேலைக்குச் செல்ல முடியாத அளவுக்கு உடல்நிலை மோசமாகிவிட்டது.. எனவே வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த சில நாட்களாகச் சிகிச்சை பெற்று வந்தார். உடல்நலம் தேறிவரும் என்ற நம்பிக்கையில் உறவினர்களும் காத்து கிடந்தனர்.

சமீபத்தில் கணவன், மனைவி இருவரும் வேலூரில் உள்ள மருத்துவமனைக்கு செல்வதாகக் கூறிவிட்டுப் புறப்பட்டவர்கள், மீண்டும் வீடு திரும்பவில்லை.. ஒருவேளை சிகிச்சைக்காக தங்கியிருந்து விட்டு வருவார்கள் என்று உறவினர்களும் நினைத்துள்ளனர்.

ஆனால், போளூர் அருகே உள்ள வடமாதிமங்கலம் ரயில் நிலையம் அருகே, நேற்று அதிகாலை 4.30 மணியளவில் நஸ்ராபூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கிச் சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் முன்பு தம்பதியர் 2 பேருமே பாய்ந்து தற்கொலை செய்துகொண்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசாரின் இருவரின் உடல்களையும் கைப்பற்றி போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையின்போது, சந்திரகுமாரின் சட்டைப் பையில் இருந்த ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில், நீண்ட நாட்களாகத் தன்னை பாதித்திருந்த நுரையீரல் தொற்று குறித்தும், அதன் காரணமாக வேலையின்றி தவித்த வேதனை குறித்தும் சந்திரகுமார் எழுதியிருந்தனர்.

"எனது நோய் பாதிப்பால் மருத்துவச் செலவுகள் அதிகரித்து விட்டது.. எதிர்காலத்தில் குடும்பத்திற்கு பெரும் கடன் சுமை ஏற்படும். எங்களது பிள்ளையையும் கடனில் தள்ள விரும்பவில்லை. இந்த நிலை நீடித்தால் நிம்மதியாக வாழ முடியாது என்பதால்தான், நாங்களே இப்படியொரு முடிவை எடுத்துக்கொண்டோம்" என்று உருக்கமாக எழுதியிருந்தார்,

10-ம் வகுப்பு படிக்கும் மகனைத் தவிக்க விட்டுவிட்டு, தம்பதியர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரயில்வே போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தம்பதி 2 பேரும் வேலூர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு பிறகு, தனிமையில் உட்கார்ந்து பேசினார்களாம்.. அப்போதுதான தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

நேற்றைய தினம், வேறொரு காதல் ஜோடி, இதுபோலவே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளது. சேலம்-திருப்பத்தூர் ரயில் மார்க்கத்தில், மொரப்பூர்-தொங்கனூர் ரயில்வே ஸ்டேஷன்களுக்கு இடைப்பட்ட பகுதியில் ஆவலம்பட்டி பிரிவு சாலை அருகே ரயில்வே தண்டவாளத்தில் 2 பேரின் சடலம் கிடந்தது.

அந்த இளைஞருக்கு கால்துண்டாகி இருந்தது.. இளம்பெண்ணுக்கு தலை துண்டாகியிருந்தது.. கொஞ்ச தூரத்தில் ஒரு பைக் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த பைக் நம்பரை கொண்டு விசாரித்ததில் அவர்கள், தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே எட்டிப்பட்டி கிராமம் அழகிரிநகரை சேர்ந்த கன்சிராம்ராணா (21), அதே ஊரைச்சேர்ந்த அறிவுஜோதி (16) என்பது தெரியவந்தது.

2 பேரும் காதலித்துள்ளார்கள். ஆனால், இவர்களது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால்தான் நேற்று அதிகாலை சென்னை சென்ற ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளது விசாரணையில் தெரியவந்தது... தமிழகத்தின் இருவேறு பகுதிகளில் நேற்று காலை அரங்கேறிய ரயில் விபத்துகள், அந்தந்த வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளன. 4 உயிர்களும் அநியாயமாக ரயில் தண்டவாளத்தில் பலியாகியுள்ளன....!!!