இறந்த மகன் உயிருடன் வந்தார்: ஒரு தாயின் கண்ணீர்ச் சந்திப்பு!

 

சுமார் 23 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாட்டிலிருந்த தனது வீட்டிலிருந்து வெளியேறி, பல்வேறு இன்னல்களை அனுபவித்து, இந்திய-பாகிஸ்தான் எல்லை அருகே கொத்தடிமையாக அடைக்கப்பட்டிருந்த ஒருவர், இறுதியாகத் தனது குடும்பத்துடன் மீண்டும் இணைந்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் பூமலைப்பட்டி அணைக்களம் கிராமத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி - சுந்தரி தம்பதியருக்கு பிரகாஷ், பிரபு என இரு மகன்கள் உள்ளனர்.

மூத்த மகன் பிரகாஷ், கடந்த 2003-ஆம் ஆண்டு பெற்றோருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வீட்டை விட்டு வெளியேறினார். அவரது பெற்றோரும் உறவினர்களும் அவரைப் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில், கடந்த ஜூலை 1-ஆம் தேதி, பத்திரிகையாளர் ஒருவர் சுந்தரியைக் கண்டறிந்து, அவரது மகன் பிரகாஷ் பஞ்சாபில் உயிருடன் இருப்பதாகத் தெரிவித்தார்.

இறந்துவிட்டதாகக் கருதிய மகன் உயிருடன் இருப்பதை அறிந்து நெகிழ்ந்த சுந்தரி, பிரகாஷைக் கோயம்புத்தூருக்கு அழைத்து வர நடவடிக்கை எடுத்தார்.

அதனைத் தொடர்ந்து, பிரகாஷின் சகோதரர் பிரபுவும் உறவினர்களும் உடனடியாக பஞ்சாப் சென்று பிரகாஷை மீட்டு அழைத்து வந்தனர்.

23 ஆண்டுகளுக்குப் பிறகு தன் மகனைப் பார்த்த தாய் சுந்தரி, கண்ணீருடன் பிரகாஷைக் கட்டிப்பிடித்து அழுத காட்சி காண்போரைக் கண்கலங்கச் செய்தது.