தென்னாப்பிரிக்காவின் மேற்கு கேப் உயர் நீதிமன்றத்தில் ஒரு அதிர்ச்சிகரமான வழக்கில் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. 8 வயது சிறுவன் டேனியல் ஜாம்னெக்கை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த குற்றத்திற்காக, அவரது நண்பனின் தந்தைக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டு ஜூன் 15 ஆம் தேதி, கேப் டவுன் அருகே உள்ள க்ராய்ஃபோன்டைன் பகுதியில் உள்ள நண்பரின் வீட்டில் தங்கியிருந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றது.
சிறுவன் நண்பனுடன் ஒரே அறையில் தங்கியிருந்தார். நண்பன் அடுக்கு படுக்கையில் உறங்கியிருக்கும்போது, அவரது தந்தை அந்த அறைக்குள் நுழைந்து சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி தனது அப்பாவித்தனத்தை வலியுறுத்திய போதிலும், நீதிமன்றம் அவரை குற்றவாளியாக அறிவித்தது. அவரது மகன் முக்கிய சாட்சியாக வாக்குமூலம் அளித்தார். குற்றவாளியின் பெயர், அவரது மகனின் அடையாளத்தை பாதுகாக்கும் நோக்கில் வெளியிடப்படவில்லை.
நீதிமன்றம் இந்த வழக்கில் இரண்டு ஆயுள் தண்டனைகளை விதித்துள்ளது. ஒன்று பாலியல் வன்கொடுமைக்காகவும், மற்றொன்று கொலைக்காகவும். இதற்கு முன்னர் 2005 ஆம் ஆண்டு ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், இந்த வழக்கில் கூடுதல் பாலியல் தாக்குதலுக்காக 8 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. இந்த அனைத்து தண்டனைகளும் ஒரே நேரத்தில் அனுபவிக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
குற்றவாளி முன்பு பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர் என்பதும், அப்போது பரோலில் இருந்த நிலையில் இந்தக் குற்றத்தைச் செய்தார் என்பதும் நீதிமன்றத்தில் வெளிப்பட்டது.
அவர் பாலியல் குற்றவாளிகளுக்கான தேசியப் பதிவேட்டில் சேர்க்கப்பட்டுள்ளார். இதனால் குழந்தைகளுடன் பணியாற்றுவதற்கும், ஆயுதம் வைத்திருப்பதற்கும் நிரந்தரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இறந்த சிறுவனின் தாயார் மரியா ஜாம்னெக்குக்கு, குற்றவாளி எதிர்காலத்தில் பரோலுக்குத் தகுதி பெற்றால், பரோல் வாரியத்திடம் முறையிடுவதற்கான உரிமை வழங்கப்பட்டுள்ளது. தாயார் மரியா, தனது மகனை “எங்கள் ஒளி” என்று விவரித்துள்ளார். இயற்கையை விரும்பிய, விலங்கு மருத்துவராக ஆக வேண்டும் என கனவு கண்ட சிறுவன் என அவர் நினைவுகூர்ந்தார்.
குற்றவாளியின் மனைவி குறித்து, அவர் சம்பவத்தைப் பார்த்து தடுக்க முயற்சிக்காமல் இருந்ததாகக் கூறப்பட்டாலும், குற்றத்தில் அவருக்கு நேரடி தொடர்பு இருப்பதாக ஆதாரம் இல்லை. பெற்றோர் ஆதரவு இன்றி வளர்ந்த அவர், கணவரின் கொடுமைகளால் பயந்து வாய் திறக்க முடியாத சூழலில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
“தடுத்தால் என்னையும் சுட்டுவிடுவார் என்று பயந்து அமைதியாக இருந்தேன்” என அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும், பொதுமக்கள் இத்தகைய கொடூரத்தை உடனடியாக புகார் செய்திருக்க வேண்டும் என விமர்சித்து வருகின்றனர்.
இந்த வழக்கு, முன் குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் விடுதலை மற்றும் கண்காணிப்பு முறையில் உள்ள குறைபாடுகளை மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. மூன்று ஆண்டுகால நீதிமன்ற நடவடிக்கைகளுக்குப் பிறகு, டேனியல் ஜாம்னெக்கிற்கு நீதி கிடைத்துள்ளது.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை மற்றும் வன்முறை என்பது குடும்பத்தை மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமூகத்தையும் பாதிக்கும் மிகக் கொடூரமான குற்றமாகும். குழந்தைகள் யாருடன் பழகுகிறார்கள், எங்கு தங்குகிறார்கள், யாரிடம் ஒப்படைக்கப்படுகிறார்கள் என்பதில் பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும்.
