தமிழகம் திருச்செங்கோடு அருகே மோட்டார் சைக்கிளில் வீதியை கடக்க முயன்றபோது தனியார் கல்லூரி பஸ் மோதியதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பாடசாலை மாணவிகளும், ஒரு கல்லூரி மாணவியும் நேற்று வியாழக்கிழமை உயிரிழந்தனர்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், எலச்சிபாளையம் அருகே கொன்னையார் ஊராட்சி சக்கராம்பாளையம் போயர் தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சேகர்-அமுதா தம்பதி மகள்கள் பிளஸ் 1 படிக்கும் நிவேதா (வயது 17), ஏழாம் வகுப்பு படிக்கும் தனுஸ்ரீ (வயது 13), ஆறாம் வகுப்பு படிக்கும் அபிநயா (வயது 12).
எலச்சிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வரும் இவர்களை ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரியில் படித்து வரும் (சித்தப்பா ரமேஷ்பாபு மகள்) சுபிதா என்ற கலைச்செல்வி (வயது 19) தினமும் பாடசாலைக்கு சென்று மோட்டார் சைக்கிளில் அழைத்து வருவது வழக்கம்.
அந்த வகையில் நேற்று வியாழக்கிழமை கல்லூரி முடிந்து வீட்டிற்கு வந்த கலைச்செல்விமோட்டார் சைக்கிளில் மூவரையும் அழைத்து வர பிற்பகல் 4.30 மணியளவில் பாடசாலைக்கு சென்றார்.
அங்கிருந்து வீட்டிற்கு நான்கு பேரும் ராசிபுரம்–திருச்செங்கோடு வீதியில் திரும்பி வந்து கொண்டிருந்தபோது, சக்கராம்பாளையத்தில் பிரிவு வீதியை கடக்க முயன்றனர்.
அப்போது ராசிபுரத்தில் இருந்து சங்ககிரி நோக்கி அதிவேகமாக வந்த தனியார் பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில், கலைச்செல்வி, அபிநயா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
நிவேதா, தனுஸ்ரீ உயிருக்கு போராடிய நிலையில் வீதியோரம் கிடந்தனர். இந்த விபத்தை பார்த்த அப்பகுதி மக்கள் திரண்டு வந்து இருவரையும் மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக நோயாளர் காவுவண்டி மூலம் அனுப்பி வைத்தனர்.
ஆனால், அவர்கள் இருவரும் செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் தனியார் கல்லூரி பஸ்ஸில் இருந்த 30 இற்கும் மேற்பட்ட மாணவிகள் வேறு பஸ்கள் மூலம் தங்களுடைய வீடுகளுக்கு சென்றனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்ததால் சக்கராம்பாளையம் கிராமம் சோகத்தில் மூழ்கி உள்ளது. இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள எலச்சிபாளையம் பொலிஸார் தப்பியோடிய கல்லூரி பஸ் ஓட்டுநரை தேடி வருகின்றனர்.
