ஸ்கார்பரோ பகுதியைச் சேர்ந்த லிபரல் நாடாளுமன்ற உறுப்பினர் சல்மா சாஹித் அவர்களின் வீட்டுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த பல வாகனங்களுக்கு கடந்த வாரம் தீ வைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட 24 வயது இளைஞர் ஒருவரை டொராண்டோ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்தக் கைது நடவடிக்கை குறித்து டொராண்டோ பொலிஸார் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்தனர்.
ஓகஸ்ட் 27ஆம் திகதி காலை, Bellamy Road North மற்றும் Lawrence Avenue East பகுதிக்கு அருகிலுள்ள சல்மா சாஹித்தின் வீட்டின் வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீது சந்தேகநபர் தீப்பற்றக்கூடிய திரவத்தை ஊற்றினார் என பொலிஸார் தெரிவித்தனர்.
அதன் பின்னர் அந்தத் திரவத்திற்கு அவர் தீ வைத்தார் எனவும் இதனால் இரண்டு வாகனங்கள் தீப்பற்றி எரிந்தன என்றும் மூன்றாவது வாகனமும் தீயினால் சேதமடைந்ததாகவும் பொலிஸார் கூறினர்.
சம்பவத்துக்குப் பின்னர் சந்தேகநபர் ஒரு வாகனத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
பொலிஸார் பின்னர் சம்பவம் தொடர்பான காணொலி ஒன்றை வெளியிட்டனர். சில நாள்களுக்குப் பிறகு, ஓகஸ்ட் 30 ஆம் திகதி, சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார் என பொலிஸார் தெரிவித்தனர்.
வெள்ளிக்கிழமை அந்த நபர் ரோஷ்வின் க்ராஃப்டன் என அடையாளம் காணப்பட்டார்.
அவர் மீது சொத்துக்கு சேதம் ஏற்படுத்தும் வகையில் தீ வைத்தல்,
5,000 டொலருக்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துக்கு சேதம் ஏற்படுத்துதல், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யக்கூடிய குற்றத்தைச் செய்ய சதித்திட்டம் தீட்டுதல், தீப்பற்றக்கூடிய பொருள்களை வைத்திருத்தல், நன்னடத்தை நிபந்தனைகளை மீறுதல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இந்தக் குற்றச்சாட்டுகள் எதுவும் இதுவரை நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.
இந்தச் சம்பவத்திற்கான நோக்கம் என்ன என்பதும், இது குறிவைத்து நடத்தப்பட்ட சம்பவமா என்பதும் இதுவரை தெரியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்தச் சம்பவத்தில் தொடர்புடையதாகக் கருதப்படும் இரண்டாவது சந்தேகநபர் ஒருவரையும் பொலிஸார் தேடி வருகின்றனர். ஆனால் அவரைப் பற்றிய அடையாள விவரங்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.
