பெய்ஜிங்: ‛‛எப்போ கல்யாணம்.. எப்போ கல்யாணம்..'' நம்ம ஊர்களில் திருமணம் ஆகாத ஆண்கள், பெண்கள் என்று இருதரப்பு இளம் வயதினரை பார்த்து பெருசுகள் கேட்கும் முக்கிய கேள்வி இதுதான். இந்த கேள்விகளை சமாளிப்பது என்பது இன்றைய இளைஞர்கள், இளம்பெண்களுக்கு பெரும் தலைவலியாகவே உள்ளது. இதுபோன்ற கேள்விகளை எதிர்கொள்ளாமல் இருக்க தான் சீனாவின் தற்போது Friendship Marriage என்ற புதிய கான்செப்ட் டிரெண்ட் ஆகி வருகிறது. இந்த முறையில் திருமணம் செய்து கொண்டாலும் கூட இருவரும் தனித்தனி படுக்கையறையில் தான் தூங்குவார்கள். இந்த ‛ப்ரண்ட்ஷிப் மேரேஜ்' என்பது என்ன? அதனை ஏன் சீன இளைஞர்கள் விரும்புகின்றனர்? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
ஒரு காலத்தில் நம்ம ஊர்களில் பெண்ணுக்கு 18 வயது ஆனால் போதும்.. உடனே திருமணம் செய்து வைத்து விடுவார்கள். அதேபோல் ஆண்களுக்கு 22, 23 வயது என்றாலே திருமணம் செய்து வைப்பார்கள். ஆனால் இப்போது அந்த நடைமுறையில் சின்ன மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆண்களும், பெண்களும் திருமணத்தை தள்ளிப்போட தொடங்கி உள்ளனர்.
பட்ட மேற்படிப்பு படிப்பது, சொந்தமாக தொழில் தொடங்குவது அல்லது பிரபல நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் வேலைக்கு அமர்வது அல்லது அரசு வேலையை பெற்ற பிறகு தான் திருமணம் செய்து கொள்வேன் என்று இப்போது இளைஞர்களும், இளம்பெண்களும் கூறி வருகின்றனர். மேலும் தங்களின் இந்த இலக்கை அடைய திருமணம் தடையாகி விடக்கூடாது என்பதற்காக இளைஞர்கள், இளம்பெண்கள் திருமணத்தை தள்ளி வைக்கின்றனர்.
ஆனாலும் கூட பெரியவர்கள் சும்மா விடுவார்களா? சான்ஸே இல்லை. திருமணத்தை தள்ளிப்போடும் பெண்களுக்கும், ஆண்களுக்கும் வீட்டில் உள்ளவர்களிடம் இருந்து திருமண பிரஷர் என்பது இருந்து கொண்டே தான் இருக்கிறது. ‛‛கல்யாணத்தை எல்லாம் தள்ளிப்போடக்கூடாது. காலகாலத்துல கல்யாணம் பண்ணினா தான் 2 குழந்தைகளை பெற்றெடுக்க முடியும்'' என்று கூறி பலருக்கும் வீட்டில் திருமணம் என்பது நடந்து கொண்டே தான் இருக்கிறது.
ஒருவேளை வீட்டில் உள்ள பெரியவர்கள் கூறியும் திருமணம் செய்து கொள்ளாவிட்டால் அந்த இளைஞர்கள், இளம்பெண்களின் பாடு திண்டாட்டம் தான். ஏனென்றால் வீட்டில் உள்ளவர்களை தாண்டி சொந்தக்காரங்க, ஊர்க்காரங்க, தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என்று மற்றவர்கள் மூலமாகவும் திருமண பிரஷர் வரும். இன்னும் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை. வயதானால் மாப்பிள்ளை, பொண்ணு கிடைக்காது என்று அவர்கள் கூறுவதை கேட்கும்போது பலருக்கும் நெஞ்செல்லாம் புண்ணாகிவிடும். இன்னும் சொல்லப்போனால் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதை தாண்டி இவர்களின் கேள்விகளுக்கு எப்படி பதில் சொல்வது என்பது பற்றி யோசிப்பதே பெரிய பிரஷராக மாறிவிடுகிறது இன்றைய இளைய சமுதாயத்தினருக்கு.
இதுபோன்ற பிரச்சனைகள் நம்ம ஊர்களில் மட்டும் தான் இருக்கிறது? என்றால் இல்லை. சீனாவிலும் இப்படி தான் இளசுகளை திருமணம் செய்ய வீட்டில் உள்ள பெரியவர்கள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இந்த பிரஷரில் இருந்து தப்பிக்க தான் சீனாவில் இளசுகள் புதிய ஐடியாவை கையில் எடுத்துள்ளனர். அதுதான் Friendship Marriage. யஸ்.. நீங்கள் படித்தது சரிதான். இந்த ‛ப்ரண்ட்ஷிப் மேரேஜ்' என்பது இன்றைய சீன இளசுகளின் மத்தியில் அதிகரித்து வருகிறது. இந்த திருமணம் என்பது ஆண், பெண் பெஸ்ட் ப்ரண்ட்டுகள் இடையே நடக்கும்.
பரஸ்பர நம்பிக்கை, நட்பின் அடிப்படையில் தான் இந்த திருமணம் என்பது இருக்கும். காலம் காலமாக பின்பற்றப்பட்டு வரும் திருமண பாரம்பரிய முறையில் இருக்காது. அதாவது இவர்கள் என்னதான் திருமணம் செய்து கொண்டாலும் கூட தனித்தனியாக தான் வாழ்வார்கள். இருவரும் ஒரே படுக்கை அல்லது படுக்கையறையை பகிர்ந்து கொள்ளமாட்டார்கள். இல்லற வாழ்க்கை கிடையாது. இன்னும் புரியும்படி கூற வேண்டும் என்றால் இருவருக்கும் இடையே தாம்பத்திய உறவு இருக்காது.
இவர்களின் திருமணம் இருகுடும்பம் மற்றும் சட்டம் அங்கீகரித்தாலும் கூட அவர்கள் கணவன் - மனைவியாக இருப்பது இல்லை. இத்தகைய செயலில் முதலில் ஜப்பான் நாட்டை சேர்ந்த இளைஞர்கள் கையில் எடுத்தனர். இப்போது சீனாவில் இந்த ‛ப்ரண்ட்ஷிப் திருமணம்' என்பது அதிகரித்து வருகிறது. அதுமட்டுமின்றி ‛ப்ரண்ட்ஷிப் மேரேஜ்' முறையில் இருப்போருக்கு எந்த கட்டுப்பாடும் இருக்காது. இருவரும் யாருடனாவது டேட்டிங் செல்ல விரும்பினால் செல்லலாம். அதற்கு எந்த தடையும் கிடையாது. ஒருவேளை குழந்தையை விரும்பினால் தத்தெடுக்கவோ அல்லது செயற்கை கருவூருதல் முறையை பின்பற்றி குழந்தையை பெற்றெடுத்து வளர்ப்பார்களாம்.
இந்த ‛ப்ரண்ட்ஷிப் மேரஜ்' எனும் நட்பு திருமணம் தற்போது சீனாவில் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வுருகிறது. இதன்மூலம் திருமணம் சார்ந்த பேச்சுவார்த்தை மூலம் தங்களுக்கு தரப்ப்படும் மனஅழுத்தம் குறைகிறது. அதேபோல் திருமணத்துக்கு பிறகும் கூட துணையால் வரும் பிரச்சனையை சந்திக்க வேண்டிய தேவையில்லை. அதுமட்டுமின்றி தங்களுக்கு பிடித்தது போல் வாழ்க்கையை வாழ முடிகிறது என்கின்றனர் இந்த சீன இளசுகள்.