திருமலையில் மழை நீர் தேங்கிய குழியில் விழுந்து ஒரு வயது குழந்தை உயிரிழப்பு-கதறி துடிக்கும் பெற்றமனம்..!

திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, காக்காமுனை  பகுதியில் மழைநீர் தேங்கி நின்ற குழியில் விழுந்து ஒரு வயது நிரம்பிய  குழந்தை உயிரிழந்துள்ளார். 

இந்த துயர சம்பவம் இன்று சனிக்கிழமை(26) காலை இடம் பெற்றுள்ளது. 

ஒரு வயதும் இரண்டு மாதங்களும் நிரம்பிய, குடும்பத்தின் ஒரே ஒரு மகனான முகமது சையான் மிசாரி என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.  

சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது, 

தனது வீட்டு முற்றத்தில், மாமரத்தில் கட்டப்பட்டிருந்த தொட்டிலுக்கு அருகில்,  விளையாடிக் கொண்டிருந்த இந்த சிறுவன், 

வீட்டுக்கு முன்னால் மழைநீர் தேங்கி நின்ற குழிக்குள் சென்று விளையாட முற்பட்டபோதே இந்த அனர்த்தம் ஏற்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் பெய்த மழை காரணமாக, தற்போது இந்தப் பகுதியில் நீர் தேங்கி நிற்பதையும் காணக்கூடியதாக உள்ளது.

கிண்ணியா பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி, நிஹ்மத்துல்லா வைத்தியசாலைக்கு வருகை தந்து, உரியவர்களிடம் சாட்சியங்களை பதிவு செய்து பொலிசாரிடம் அறிக்கையை கையளித்தார்.