சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 56 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களுடன் பெண் வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று வியாழக்கிழமை (01) விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர் இரத்தினபுரி - மத்தேகொட பிரதேசத்தைச் சேர்ந்த 63 வயதுடைய பெண் வர்த்தகர் ஆவார்.
சந்தேக நபரான பெண் வர்த்தகர் துபாயிலிருந்து நேற்று காலை 07.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
பின்னர் சந்தேக நபரான பெண் வர்த்தகர் விமான நிலையத்தை விட்டு வெளியேற முயன்ற போது விமான நிலைய பொலிஸாரால் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
இதன்போது சந்தேக நபரான பெண் வர்த்தகர் கொண்டு வந்த பயணப்பொதிகளிலிருந்து தங்க நகைகள், 6 மடிக்கணினிகள் மற்றும் 11 கையடக்கத் தொலைபேசிகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனையடுத்து கைதுசெய்யப்பட்ட பெண் வர்த்தகர் மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.