சவூதி அரேபியாவில் வீட்டுப் பணிப்பெண்ணாகப் பணியாற்றிவிட்டு இலங்கைக்குத் திரும்பிய பெண் ஒருவர் காணாமல் போனது குறித்து கஹதுட்டுவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
38 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.மூன்று குழந்தைகளின் தாயான 38 வயதான சாரங்கா உதேஷிகா பெரேரா, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவரது வீட்டின் குறைபாடுகளை நிறைவேற்றுவது உட்பட பல கனவுகளுடன் வீட்டு வேலைக்காக சவூதி அரேபியாவுக்குச் சென்றுள்ளார்.
சாரங்கா அங்கிருந்த ஒவ்வொரு நாளிலும் தனக்குக் கிடைத்த ஒவ்வொரு செய்தியையும் அனுபவங்களையும் தனது கணவர் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் தெரிவிக்க மறக்கவில்லை.
இந்நிலையில், ஏப்ரல் 19 ஆம் திகதிக்கு முன்பு இலங்கைக்குத் திரும்பிவிடுவதாக தனது கணவரிடம் கடந்த மாதம் அவர் தெரிவித்திருந்தார்.
இருப்பினும், குறிப்பிட்டவாறு அவர் வருகை தராததைத் தொடர்ந்து அவரது கணவர் பொலிஸ் நிலையத்தில் வழங்கிய முறைப்பாட்டுக்கமைய நடத்தப்பட்ட விசாரணையில், ஏப்ரல் 14 ஆம் திகதி அதிகாலை 2.05 மணிக்கு அவர் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சாரங்காவின் கணவர் பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தில் மேற்கொண்ட விசாரணையிலும் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பின்னர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள CCTV காட்சிகளை பொலிஸார் சோதனை செய்தபோது, ஏப்ரல் 14 ஆம் திகதி அதிகாலை 3.30 மணியளவில் சாரங்கா இரண்டு பயணப் பைகளுடன் வாடகைக் காரில் புறப்பட்டுச் சென்றது தெரியவந்தது.