கொழும்பு கொட்டாஞ்சேனை சுமித்ராராம மாவத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவத்தின் பின் தப்பிச் சென்ற சந்தேக நபரும், குற்றத்திற்கு உதவிய மற்றொரு சந்தேக நபரும் நேற்று (17) கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்திலும், கொழும்பு வடக்கு குற்ற விசாரணை பணியகத்திலும் சட்டத்தரணிகள் மூலம் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 17 மற்றும் 18 வயதுடையவர்கள் என்றும், கொழும்பு 13 ஐ சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர்கள் இன்று (18) புதுக்கடை இலக்கம் 05 நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். கொட்டாஞ்சேனை பொலிஸாரும் கொழும்பு வடக்கு குற்றப் விசாரணை பணியகமும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளன.
கடந்த 16 ஆம் திகதி, கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவின் சுமித்ராராம மாவத்தை பகுதியில் மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.