பெங்களூர்: கர்நாடக மாநிலம் சிக்மகளூரு அருகே வனப்பகுதியில் ‛டிரக்கிங்’ சென்ற 11 மருத்துவ மாணவர்கள் திடீரென்று வழி மாறி தவித்தனர். இதனால் அவர்கள் அடர்காட்டில் சிக்கி கொண்ட நிலையில் நீண்டநேர தேடுதல் வேட்டைக்கு பிறகு காவல்துறை, அந்த பகுதி மக்கள் அவர்கள் 11 பேரையும் பத்திரமாக மீட்டனர்.
கர்நாடகா மாநிலம் சித்ரதுர்காவில் உள்ள மருத்துவக்கல்லூரியில் படிக்கும் மாணவ-மாணவிகள் சிக்கமகளூருக்கு சுற்றுலா சென்றனர். இதில் 5 மாணவர்கள், 6 மாணவிகள் என்று மொத்தம் 11 பேர் சென்றனர்.
சிக்கமகளூரு அருகே உள்ள பல்லலாராயணா துர்கா எனும் மலைக்கு நேற்று காலையில் அவர்கள் சென்றனர். அது அடர்ந்த வனப்பகுதியாகும். அங்கு அவர்கள் ‛டிரக்கிங்' சென்றனர்.
பல்லலாராயணா மலையில்இருந்து பண்டேஜி அருவிக்கு அவர்கள் வனப்பகுதி வழியாக செல்ல முயன்றனர். வனப்பகுதியின் மையப்பகுதிக்குள் அவர்கள் சிக்கி கொண்டனர். அடர் வனப்பகுதி என்பதால் அவர்கள் எங்கு செல்வது என்று தெரியாமல் விழித்தனர். அங்கிருந்து பண்டேஜி அருவி மற்றும் பல்லலாராயணா மலையில் ‛டிரக்கிங்' புறப்பட்ட இடத்துக்கு அவர்களால் வர முடியவில்லை. வனப்பகுதியிலேயே சிக்கி தவித்தனர்.
இதற்கிடையே தான் மாணவ-மாணவிகள் டிரக்கிங் சென்று மாயமான தகவல் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. போலீசார் வனப்பகுதியையொட்டி கிராமத்தை சேர்ந்த ஆரிப், சந்தோஷ் அட்டிகெரே மற்றும் சஞ்சய் ஆகியோரை அழைத்து கொண்டு மாணவ-மாணவிகளை தேடி சென்றனர். நீண்டநேரமாகஅவர்கள் தேடுதல் நடத்தினர். இறுதியாக நேற்று இரவில் மாணவ-மாணவிகள் 11 பேரையும் பத்திரமாக மீட்டனர்.
மாணவ-மாணவிகள் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து டிரக்கிங் செல்வோருக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. டிரக்கிங்கிற்கு முன்பாக காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகளிடம் முறையாக அனுமதி பெற வேண்டும். வனப்பகுதியை நன்கு அறிந்த உள்ளூர் வழிக்காட்டியை அழைத்து கொண்டு செல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
கர்நாடகாவில் இப்படி அடர் வனப்பகுதியில் டிரக்கிங் சென்று பாதிவழியில் சிக்கி கொள்வது ஒன்றும் புதிது அல்ல. இதற்கு முன்பும் பலமுறை நடந்துள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.