Type Here to Get Search Results !

லஞ்சம் பெற்ற அரச அதிகாரிக்கு கொழும்பு நீதிமன்று மிரட்டல் தீர்ப்பு..!

 

தம்புத்தேகம மகாவலி வலயத்தில் காணியொன்றில் உள்ள மரத்தை வெட்டுவதற்கு அனுமதி வழங்குவதற்காக 100,000 இலஞ்சம் கேட்டு பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில் முன்னாள் காணி அதிகாரி ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் (25) 22 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

நீண்ட விசாரணைக்குப் பிறகு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுஜீவ நிஸ்ஸங்க மேற்படி தீர்ப்பை வழங்கினார்.

மேலும், பிரதிவாதிக்கு 30,000 ரூபா அபராதம் விதித்த நீதிபதி, இலஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் பிரிவு 26 இன் கீழ் இலஞ்சத் தொகையை அபராதமாக வசூலிக்கவும் உத்தரவிட்டார்.

அபராதம் செலுத்தாவிட்டால் மேலதிகமாக ஒரு வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும், சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ள மனுதாரருக்கு ஒரு இலட்சம் ரூபா இழப்பீடு வழங்குமாறு பிரதிவாதிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அனுராதபுரம் பகுதியில் வசிக்கும் 67 வயதான முன்னாள் காணி அதிகாரி ஒருவருக்கே இந்த தண்டனை விதிக்கப்பட்டது.

மகாவலி பிராந்தியத்தில் உள்ள நிலங்களிலிருந்து மரங்களை வாங்கி, அவற்றை வெட்டி மொரட்டுவ பகுதிக்கு கொண்டு செல்லும் தொழிலை மனுதாரர் நடத்தி வருவதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கொள்வனவு செய்த மரங்களை வெட்டுவதற்கு பிரதேச காரியாலயத்தில் மனுதாரர் அனுமதி கோரியிருந்தார், மேலும் பிரதிவாதி அனுமதி வழங்குவதற்கு மேற்படி இலஞ்சத் தொகையை கோரியிருந்தார்.

பின்னர், 2016 மார்ச் 14ஆம் திகதி குற்றம் சாட்டப்பட்டவர் தொடர்புடைய இலஞ்சத்தைப் பெற்றபோது, ​​அவர் இலஞ்ச ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

நீண்ட விசாரணைக்குப் பிறகு தீர்ப்பை அறிவித்த உயர் நீதிமன்ற நீதிபதி, பிரதிவாதிக்கு எதிராக அரச தரப்பு சுமத்திய குற்றச்சாட்டுகள் நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அதன்படி, பிரதிவாதிக்கு இந்த தண்டனைகள் விதிக்கப்படும் என்று நீதிபதி குறிப்பிட்டார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Bottom Post Ad