மட்டக்களப்பு முனைக்காடு கிராமத்தில் ஆலயத்தில் வைத்து மின்சாரம் தாக்கி 16 வயது சிறுவன் உயிரிழப்பு
மட்டக்களப்பு முனைக்காடு கிராமத்தில் மின்சாரம் தாக்கி 16 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.இன் சம்பவம் இன்று ( 02) புதன்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முனைக்காடு கிராமத்தில் அமைந்துள்ள நாகதம்பிரான் ஆலயத்தில் வருடாந்த அலங்கார உச்சவம் இடம்பெற்றுவரும் நிலையில் ஆனி உத்தர நாளான இன்றைய தினம் அதிகாலை வேளை விஷேட பூசை இடம்பெற்ற நிலையில் பாம்புப் புற்றுக்கு பாலூற்றி விட்டு அதனருகில் நின்ற போது அருகில் இருந்த மின்குமிழுக்கு இணைக்கப்பட்டிருந்த மின் வடத்திலிருந்த மின் ஒழுக்கு காரணமாக சிறுவனுக்கு மின்சாரம் தாக்கிய நிலையில் குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளான்.
உயிரிழந்தவர் முனைக்காடு கிராமத்தை சேர்ந்த 16 வயதான செந்தில்குமரன் கியோபன் என தெரிவிக்கப்படுகிறது
குறித்த சிறுவன் நாகதம்பிரான் ஆலயத்தில் சிறுவயது முதல் தொண்டாற்றி வருவதுடன் நல் ஒழுக்கமுள்ள இறை பக்தியுள்ள ஒருவர் என்றும் இவரது துரதிஷ்டவசமான இழப்பு ஆலய நிருவாகத்தையும் கிராமப் பொது மக்களையும் கவலை கொள்ளச் செய்கிறது.
பாடசாலையில் கல்வி கற்ற காலத்திலும் ஒழுக்கமுள்ள மாணவனாக கலாசார வாத்திய இன்னியக் குழுவிலும் இணைந்து செயற்ப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது
அன்னாரின் இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தினரின் துயரில் பங்கு கொள்வதுடன் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்