தும்கூர் மாவட்டம், கொரட்டகெரே தாலுக்காவில் உள்ள சிம்புகனஹள்ளி கிராமத்தில், ஆகஸ்ட் 7, 2025 அன்று காலை, ஒரு தெரு நாய் மனிதக் கையை வாயில் கவ்வி செல்வதைப் பார்த்து மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவலர்கள், பிளாஸ்டிக் பையில் மனிதக் கையை மீட்டனர். மற்ற உடல் பாகங்களும் துண்டிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகித்து, 5 கி.மீ. சுற்றளவில் தேடுதல் வேட்டை நடத்தினர்.
தேடுதலில், 9 இடங்களில் 19 உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன, ஆனால் தலையைக் காணவில்லை. பரிசோதனையில், கொலை செய்யப்பட்டவர் பெண் என்பது உறுதியானது.
தும்கூர் மாவட்டத்தில் காணாமல் போன பெண்கள் குறித்து விசாரித்தபோது, பெல்லவி கிராமத்தைச் சேர்ந்த 42 வயது லட்சுமி தேவி ஆகஸ்ட் 3 முதல் காணவில்லை என்பது தெரியவந்தது.
அவரது கணவர் பசவராஜ், மனைவி காணாமல் போனதாக புகார் அளித்திருந்தார். பசவராஜ், கண்டெடுக்கப்பட்ட உடல் பாகங்கள் லட்சுமி தேவியுடையவை என அடையாளம் காட்டினார்.காவல்துறை விசாரணையைத் தீவிரப்படுத்தியது.
சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஆகஸ்ட் 3 அன்று மாலை வெள்ளை நிற மாருதி சுஸுகி பிரெஸ்ஸா கார் ஒன்று அனுமந்தபுரா பகுதியில் இருந்து செல்வது பதிவாகியிருந்தது.
அந்தக் கார் சதீஷ் என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. சதீஷையும் அவரது உறவினர் கிரணையும் கைது செய்து விசாரித்தபோது, அதிர்ச்சிகரமான உண்மை வெளிவந்தது.
லட்சுமி தேவியின் மருமகன், பல் மருத்துவரான டாக்டர் ராமச்சந்திரையா, தனது மாமியார் லட்சுமி தேவியை கொலை செய்ய சதீஷ் மற்றும் கிரணிடம் உத்தரவிட்டிருந்தார்.
ராமச்சந்திரையாவுக்கு முதல் திருமணம் விவாகரத்தில் முடியும் நிலையில், லட்சுமி தேவியின் மகள் தேஜஸ்வியை இரண்டாவதாக திருமணம் செய்திருந்தார்.
47 வயதான ராமச்சந்திரையாவுக்கும், 26 வயது தேஜஸ்விக்கும் 20 வயது வித்தியாசம் இருந்தது. இதை லட்சுமி தேவி அடிக்கடி குறைகூறி, மருமகனை அவமானப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.இந்த அவமானத்தால் ஆத்திரமடைந்த ராமச்சந்திரையா, மாமியாரைக் கொலை செய்ய முடிவெடுத்தார்.
சதீஷையும் கிரணையும் தொடர்பு கொண்டு, கொலைக்கு முன்பு சடலத்தை மறைக்க ஒரு காஸ்ட்லி காரை வாங்கி பயன்படுத்தினார். கூர்மையான ஆயுதங்களால் லட்சுமி தேவியின் உடலை 19 துண்டுகளாக வெட்டி, பல இடங்களில் வீசி, குற்றத்தை மறைக்க முயன்றார்.
ஆனால், காவல்துறையின் திறமையான விசாரணையால், ராமச்சந்திரையா, சதீஷ், கிரண் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர்.இந்தக் கொடூரக் கொலை தும்கூர் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குற்றம் எவ்வளவு தந்திரமாக மறைக்கப்பட்டாலும், உண்மை வெளிவரும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு எடுத்துக்காட்டாக அமைந்தது.
