நாடு முழுவதிலும் தற்போது 36,178 ஆசிரியர் வெற்றிடங்கள் நிலவுவதாக, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரிணி அமரசூரிய இன்று (21) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பிரதமர், தேசிய பாடசாலைகளில் 1,501 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
மேல் மாகாணத்தில் 4,630 வெற்றிடங்கள், தென் மாகாணத்தில் 2,513 வெற்றிடங்கள், மத்திய மாகாணத்தில் 6,318 வெற்றிடங்கள், வடமேல் மாகாணத்தில் 2,990 வெற்றிடங்கள், ஊவா மாகாணத்தில் 2,780 வெற்றிடங்கள், வடமத்திய மாகாணத்தில் 1,568 வெற்றிடங்கள், கிழக்கு மாகாணத்தில் 6,613 வெற்றிடங்கள், சப்ரகமுவ மாகாணத்தில் 3,994 வெற்றிடங்கள், வட மாகாணத்தில் 3,271 ஆசிரியர் வெற்றிடங்கள் நிலவுவதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
நாடு முழுவதிலும் உள்ள தேசியப் பாடசாலைகளில் அறிவியல், கணிதம், தொழில்நுட்பம், சிங்களம், ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகள் பாடங்களுக்கும் ஆசிரிய வெற்றிடங்கள் காணப்படுகின்றன.
க.பொ.த. உயர்தரப் பட்டதாரி ஆசிரியர்களை வெற்றிடங்களுக்கு நிரப்புவதற்காக, 2024 ஜூலை 28ஆம் திகதி ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதாகவும் பிரதமர் இதன்போது தெரிவித்துள்ளார்.
