திங்கட்கிழமை காலை வாழைச் சேனை பொலிஸ் பிரிவின் வாகனேரி பிரதேசத்தில் இடம்பெற்ற குடும்பத் தகராறு ஒன்றைத் தொடர்ந்து 46 வயதுடைய நபர் ஒருவர் கொல்லப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸார் கூறுகையில், குறித்த நபர் தனது வீட்டில் நடந்த வாக்குவாதத்தின் போது பலத்த காயங்களுக்கு உள்ளானார்.
இதுகுறித்து முறைப்பாடு கிடைத்ததையடுத்து வாழைச்சேனை பொலிஸ் நிலையம் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, இந்தச் சம்பவம் உயிரிழந்தவருக்கும் அவரது மனைவிக்கும் இடையிலான குடும்பத் தகராறு காரணமாகவே ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதத்தின் போது, கணவர் கூர்மையான ஆயுதத்தால் தனது மனைவியைத் தாக்க முயன்றதாகவும், அதனைத் தொடர்ந்து மனைவி தற்காப்புக்காகப் பதிலுக்குத் தாக்கியதில் அவர் மரணமடைந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் வழமைபோல விவசாய நடவடிக்கைகளுக்காக இரவு வீட்டை விட்டு வெளியேறி, நேற்று காலையில் வீடு திரும்பியுள்ளார்.
இந்த நிலையில் மனைவியிடம் காலை உணவாக பிட்டு தயாரித்து தருமாறு கோரியுள்ளார். அதன்பின்னர் கணவனுக்கும், மனைவிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
வாழைச்சனை, வாகனேரி பிரதேசத்தைச் சேர்ந்த உயிரிழந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் 42 வயதுடைய சந்தேக நபரான பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாழைச்சனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
.jpeg)