நெடுந்தீவில் சேவையில் ஈடுபடுத்த இ.போ.சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று கடற்படையின் விசேட படகு மூலம் நெடுதீவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
நெடுந்தீவில் இதுவரை காலமும் ஒரே ஒரு இ.போ.ச பஸ் மாத்திரமே தீவு முழுவதற்குமான சேவையில் ஈடுபட்டிருந்தது.
நீண்ட நாட்களாக சேவையில் ஈடுபட்ட குறித்த பஸ் , துரு ஏறி அடிக்கடி பழுதடையும் நிலையில், கடும் சிரமத்திற்கு மத்தியில் பஸ் சேவையில் ஈடுபடுத்தப்பட்டது.
அதிகளவான சுற்றுலா பயணிகள் நெடுந்தீவுக்கு செல்லும் நிலையிலும் , அங்குள்ள மக்களின் போக்குவரத்திற்கும் பெரும் இடர் நிலவி வந்த நிலையில் , கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் 18ஆம் திகதி யாழ். மாவட்ட செயலகத்தில் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் நடைபெற்ற போக்குவரத்து ஒருங்கிணைப்புக் விசேட குழுக்கூட்டத்தில் நெடுந்தீவு பஸ் விடயம் குறித்த பேசப்பட்டது.
அது தொடர்பில் உடன் நடவடிக்கை எடுக்குமாறு அப்போது அமைச்சர் கூறியிருந்த நிலையில் சுமார் 5 மாதங்களின் பின்னர் நெடுந்தீவுக்கு பஸ் கொண்டு செல்லப்பட்டு, சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை, இதுவரை காலமும் நெடுந்தீவில் சேவையில் ஈடுபட்ட பஸ் திருத்த வேலைகளுக்காக யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
