பம்பலப்பிட்டி பிலாவூஸ் (Pilawoos) உணவகத்தில் தனக்கு பரிமாறப்பட்ட சோறு மற்றும் கறியில் குட்டிப் பாம்பு ஒன்றைக் கண்டெடுத்ததாக நபர் ஒருவர் கூறியதையடுத்து, சமூக ஊடகங்களில் பரவி வரும் வீடியோ ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில், உணவில் சிறிய பாம்பு போன்ற தலை இருப்பது போல் காணப்படுகின்றமையானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இன்று (12) காலை குறித்த பிரபலமான உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது இது கண்டுபிடிக்கப்பட்டதாக வீடியோவை வெளியிட்டவர் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், பம்பலப்பிட்டி பிலாவூஸ் நிர்வாகம் இந்தக் குற்றச்சாட்டை முற்றாக மறுத்துள்ளதுடன், தங்கள் உணவகத்தில் இத்தகைய சம்பவம் நடக்க வாய்ப்பில்லை என்றும் தெரிவித்துள்ளது.
"எங்கள் தரப்பில் இப்படி நடப்பது சாத்தியமில்லை," என்று உணவக முகாமையாளர் பிரபல ஊடகமொன்றிடம் தெரிவித்துள்ளார்.
வீடியோ வெளியான சிறிது நேரத்திலேயே பொது சுகாதாரப் பரிசோதகர்கள் (PHIs) குறித்த இடத்திற்குச் சென்று விடயத்தை ஆராய்ந்ததாகவும் அவர் கூறினார்.
வீடியோவில் உள்ள நபர் சமூக ஊடகங்களில் பிரபலமானவர் (Social Media Influencer) என்றும், இணையத்தில் பார்வைகளை (Views) அதிகரிப்பதற்காக இந்த வீடியோ உருவாக்கப்பட்டிருக்கலாம் என்றும் பல வாடிக்கையாளர்கள் உணவகத்தைத் தொடர்புகொண்டு கூறியதாக முகாமையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், இதுதொடர்பாக உத்தியோகபூர்வ முறைப்பாடு எதுவும் பதிவு செய்யப்படாவிட்டாலும், அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் (CMC) பிரதம மருத்துவ அதிகாரி Dr. கே. ஸ்ரீபிரதாபன் தெரிவித்துள்ளார்.
"நாங்கள் இந்தச் சம்பவம் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளோம், மேலும் உணவு மாதிரிகளைப் பெற்றுக்கொள்வோம். ஏதேனும் சுகாதாரப் பிரச்சினை இருப்பது கண்டறியப்பட்டால், சட்ட நடவடிக்கை எடுக்கத் தயங்க மாட்டோம்," என்று Dr. கே. ஸ்ரீபிரதாபன் தெரிவித்துள்ளார்.
கட்டுமானப் பணிகள் நடந்துகொண்டிருந்த சமையலறைப் பகுதியின் தரையில் அடையாளம் காணப்பட்ட சில சுகாதாரம் தொடர்பான குறைபாடுகளுக்காக, சில வாரங்களுக்கு முன்பு இதே உணவகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். "அதற்காக நாங்கள் அபராதமும் விதித்துள்ளோம்," என்று அவர் கூறியுள்ளார்.
தற்போது நடைபெற்று வரும் ஆய்வு மற்றும் ஆய்வகப் பரிசோதனையின் முடிவைப் பொறுத்து மேலதிக நடவடிக்கைகள் அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
