உத்தரப் பிரதேச மாநிலம், பஸ்தி மாவட்டம் சதர் கோட்வாலி காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் பெண் காவலர் மேனகா சௌஹான் (Menaka Chauhan) மீது நடந்த பாலியல் தொல்லை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேனகா சௌஹான், தனது தாயாருக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரை கவனித்துக்கொள்ள விடுப்பு கோரியபோது, காவல் நிலைய அதிகாரி (SHO - Station House Officer) தினேஷ் சந்திர சௌத்ரி (Dinesh Chandra Chaudhary) முதலில் விடுப்பு மறுத்துள்ளார். பின்னர் அவரை தனியாக அழைத்து தனிப்பட்ட கைபேசி எண்ணை கொடுத்து, பணி முடிந்த பிறகு தொடர்பு கொள்ளுமாறு கூறியுள்ளார்.
மேனகா விடுப்பு குறித்து கேட்க தொடர்பு கொண்டபோது, தினேஷ் சந்திரா "விடுப்பு வேண்டுமானால் தன்னுடன் தனிமையில் இருக்க வேண்டும்", "அடிக்கடி தனிப்பட்ட எண்ணிற்கு போன் செய்து பேச வேண்டும்", "தன்னை 'மச்சான்' (jija - மாமன்) என்று அழைக்க வேண்டும்" என பாலியல் ரீதியான நிபந்தனைகளை விதித்து கட்டாயப்படுத்தியுள்ளார். இதை எதிர்த்த மேனகா மறுப்பு தெரிவித்து போனை துண்டித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த தினேஷ் சந்திரா, மேனகாவுக்கு வேலையில் அதிக பணிச்சுமை கொடுத்து தொல்லை செய்து வந்துள்ளார். மேலும், "உன் சட்டையை கழட்டிடுவேன், சட்டையை மட்டுமல்ல பேண்ட்டையும் கழட்டிடுவேன்" போன்ற ஆபாசமான வார்த்தைகளால் மிரட்டியும், மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் துன்புறுத்தியுள்ளார். சில தகவல்களின்படி, கொலை முயற்சி செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக மேனகா பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதைத் தொடர்ந்து உயர் அதிகாரிகள் உடனடியாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தினேஷ் சந்திரா பாலியல் தொல்லை கொடுத்தது, ஆபாசமாக பேசியது உறுதியானது. அவரை கைது செய்த காவல்துறை, தனிப்படை அமைத்து விரிவான விசாரணை நடத்தி வருகிறது
மேலும் விசாரணையில், தினேஷ் சந்திரா மேனகாவுக்கு மட்டுமின்றி, அந்த காவல் நிலையத்தில் பணியாற்றும் மற்ற பெண் காவலர்களுக்கும் இதேபோன்ற பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரிய வந்துள்ளது. இது காவல்துறைக்குள் நிலவும் பாலியல் துன்புறுத்தல் பிரச்சினையை மீண்டும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக DIG உள்ளிட்ட உயர் அதிகாரிகள் நடுநிலையான விசாரணைக்கு உறுதியளித்துள்ளனர். தினேஷ் சந்திரா இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து, அவை அடிப்படையற்றவை என்று கூறியுள்ளார். இருப்பினும், விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட மேனகா சௌஹானுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
