தமிழக வெற்றிக் கழக (TVK) தலைவரும், பிரபல நடிகருமான விஜய் மனைவி சங்கீதா சொர்ணலிங்கம் செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 1999ஆம் ஆண்டு திருமணமாகி 27 ஆண்டுகள் கழித்து இந்த முடிவுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சங்கீதா தாக்கல் செய்த 12 பக்க மனுவில், தனது கணவர் விஜய்க்கு ஒரு பிரபல நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவு (extramarital affair) இருப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
2021 ஏப்ரல் மாதம் இந்த உறவை தான் கண்டுபிடித்ததாகவும், அதன்போது விஜய் அந்த உறவை முடித்துக்கொள்வதாக வாக்குறுதி அளித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், அந்த வாக்குறுதியை மதிக்காமல், விஜய் தொடர்ந்து அந்த நடிகையுடன் உறவை பேணி வந்ததாக சங்கீதா குற்றம் சாட்டியுள்ளார்.
வெளிநாட்டு பயணங்கள், பொது நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றில் இருவரும் ஒன்றாக சென்றதாகவும், அந்த நடிகை விஜயுடன் இருக்கும் புகைப்படங்களை தொடர்ந்து சமூக வலைதளங்களில் (social media) பதிவிட்டு வந்ததாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புகைப்பட பதிவுகளால் தனக்கும், தங்கள் குழந்தைகளுக்கும் (மகன் ஜேசன் சஞ்சய், மகள் திவ்யா சாஷா) மீண்டும் மீண்டும் அவமானம் ஏற்பட்டதாக சங்கீதா குறிப்பிட்டுள்ளார். நண்பர்கள், உறவினர்கள், சமூக வட்டாரம் மற்றும் சமூக ஊடகங்களில் குழந்தைகள் பெரும் மன உளைச்சலையும், அவமானத்தையும் சந்திக்க நேரிட்டதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
விஜய் இந்த பதிவுகளுக்கு எந்த மறுப்பும் தெரிவிக்காமல் இருந்தது, அவற்றை மறைமுகமாக ஆதரிப்பதாகவே பொருள் கொள்ள வேண்டும் என்றும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், 2021 முதல் விஜய் தன்னை உணர்ச்சி ரீதியாகவும், உடல் ரீதியாகவும் புறக்கணித்து வந்ததாகவும், ஒரே வீட்டில் இருந்தாலும் தனித்தனி வாழ்க்கை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் (constructive desertion) சங்கீதா குற்றஞ்சாட்டியுள்ளார்.
திருமணத்தை மீறிய உறவை தட்டிக் கேட்டதால், தனது சுதந்திரத்தை முடக்கி, நிதி கட்டுப்பாடுகளை விதித்து மனரீதியான கொடுமைகளுக்கு ஆளாக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனால் தீவிர மன உளைச்சல், அவமானம், துரோக உணர்வு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டதாக கூறும் சங்கீதா, திருமணம் மீள முடியாத அளவுக்கு உடைந்துவிட்டதாகவும், ஜீவனாம்சம் உள்ளிட்ட உரிமைகளை கோரியும் மனு அளித்துள்ளார்.
மேலும், வழக்கு விசாரணைக்கு வரும் போது ஊடகங்கள், சமூக வலைதளங்களில் விவாதங்கள் நடத்தப்படாமல் தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். (தேவைப்பட்டால் அந்த நடிகையை இரண்டாவது எதிர்மனுதாரராக சேர்க்கும் உரிமையை தக்க வைத்துள்ளார்.)
இந்த மனு எண் 73-ஆக பதிவாகியுள்ளதாகவும், வரும் மார்ச் 20ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜய் தரப்பில் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ பதிலும் வெளியாகவில்லை. இந்த சம்பவம் அவரது அரசியல், திரைத்துறை ரசிகர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
