ஈரான் போரால் பல நாடுகளில் லாக் டவுன் - பள்ளி விடுமுறை; ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை போர் காரணமாக பல்வேறு நாடுகளும் கொரோனா கால லாக் டவுன் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 28 ஆம் திகதி, ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தாக்குதலை தொடங்கியது. இதற்கு பதிலடியாக, ஈரான் இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக மத்திய கிழக்கு முழுவதும் போர் சூழல் நிலவி வருகிறது. பல நாடுகளில் பள்ளி கல்லூரிகள் இணைய வழியில் நடைபெறுகிறது. அலுவலகங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்து வேலை(Work from Home) பார்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது. ஏகப்பட்ட விமான நிறுவனங்கள் தங்களது விமானசேவையை நிறுத்தியுள்ளது. ஆனால் இந்த போரின் தாக்கம், மத்திய கிழக்கு மட்டுமின்றி உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எரிபொருள் தட்டுப்பாட்டால் லாக் டவுன் எண்ணெய் கிடங்குகள் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதலால், உலகின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான சவுதி அரம்கோ தொழிற்சாலையை மூடியது. கத்தார் அதன் LPG, CNG உற்பத்திகளை நிறுத்தியது. உலகின் 20% எரிபொருள் விநியோகம் நடைபெறும் ஹார்மோஸ் நீரிணையை(strait of hormuz) ஈரான் மூடியுள்ளதால், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மேலும், LPGக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், இந்தியாவில் பல்வேறு உணவகங்கள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதே போல், பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப்பும் போர் சூழல் காரணமாக ஏற்பட்டுள்ள எரிசக்தி தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை அறிவித்துள்ளார். அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் 50% பேர் சுழற்சி முறையில் வீட்டில் இருந்து பணியாற்றுவார்கள். அரசு ஊழியர்களுக்கு வாரத்திற்கு 2 நாள் வேலை, பள்ளிகளுக்கு 2 வாரம் விடுமுறை, உயர்கல்வி நிறுவனங்களுக்கு இணையவழி வகுப்பு ஆகிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும், சட்டமன்ற ஊழியர்களின் ஊதியங்கள் 25% குறைப்பு, அனைத்து அரசு அதிகார மட்ட சந்திப்பையும் இணைய வழியில் மேற்கொள்ள வேண்டும். திருமணம் போன்ற நிகழ்வுகளில் 200 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். ஒரு முக்கிய உணவு மட்டுமே பரிமாறப்பட வேண்டும் போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதே போல் வங்கதேசமும் எரிபொருளை சேமிக்கும் வகையில், பள்ளி கல்லூரிகளை மூடி மாணவர்கள் இணைய வழி வகுப்பை தொடர அறிவுறுத்தியுளளது. கார் மற்றும் இரு சக்கர மோட்டார் வாகனங்களுக்கு பெட்ரோல் வழங்குவதில் மியான்மர், வங்கதேசம் ஆகிய நாடுகள் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. ஊழியர்களை வீட்டில் இருந்து வேலை செய்ய அறிவுத்தியுள்ள தாய்லாந்து, மின்சார பயன்பாட்டை சிக்கமானாக கடைப்பிடிக்க வேண்டும், மின்தூக்கி இயந்திரங்களுக்கு பதிலாக படிக்கட்டுகளை பயன்படுத்த வேண்டும். ஏசியை 26-27°C வெப்பநிலையில் அமைத்தல், மின் சாதனங்களை அணைத்தல், நகல் இயந்திரப் பயன்பாட்டைக் குறைத்தல் ஆகிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. பெட்ரோலிய பொருட்களின் மீதான இறக்குமதி வரியை நீக்கிய வியட்நாம், வாரத்திற்கு 4 நாள் வேலை, ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை பார்ப்பது போன்ற சிக்கன நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. முன்னதாக உலகம் கொரோனா பெருந்தொற்றை எதிர்கொண்ட போது, இதே போல் பள்ளிகள் கல்லூரிகள் இணைய வழியில் நடைபெற்றது. ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்ற அறிவுறுத்தப்பட்டார்கள்
