விவசாயம், மீன்பிடி மற்றும் ஏனைய இயந்திர பயன்பாடுகளை மேற்கொள்பவர்களுக்கு எரிபொருளை பெற தேசிய அடையாள அட்டை இலக்கத்தை அடிப்படையாகக் கொண்ட புதிய QR முறைமையொன்றை அறிமுகப்படுத்த இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் இது குறித்து மேலும் கூறுகையில், வாகனங்கள் அன்றி இயந்திரங்களை இயக்க எரிபொருள் தேவைப்படும் தரப்பினருக்காகவே இந்த விசேட QR முறைமை வடிவமைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தமது எரிபொருள் தேவையை கிராம உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலகத்தில் உறுதிப்படுத்தி, இந்த புதிய QR முறைமையின் கீழ் பதிவு செய்துகொள்ள முடியும். இந்த புதிய QR குறியீடானது அந்தந்த நபர்களின் தேசிய அடையாள அட்டை இலக்கத்திற்கு அமைய உருவாக்கப்படும்.
இத்திட்டம் 7 வெவ்வேறு பிரிவுகளின் கீழ் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன், ஒவ்வொரு பிரிவிற்கும் வழங்கப்படும் எரிபொருள் அளவை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானிக்கும்.
இதன் மூலம் விவசாயிகள், கடற்தொழிலாளர்கள் மற்றும் பல்வேறு வர்த்தக நடவடிக்கைகளுக்காக இயந்திரங்களுக்காக எரிபொருளைப் பயன்படுத்தும் அனைத்து தரப்பினரினதும் எரிபொருள் தேவைகளை இலகுவாகப் பூர்த்தி செய்ய முடியும் என எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
வியாபார நிலையங்கள் எரிபொருள் QR குறியீடுகளைப் பெற்றுக்கொள்வதற்கான புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் ஆலோசகர் சுமுது ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஒரு வியாபார நிறுவனத்திற்குச் சொந்தமான அனைத்து வாகனங்களுக்கும் அந்த நிறுவனத்தின் பெயரிலேயே QR குறியீடு பெறுவதற்கான வசதியே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
