அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாய் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வருவதன் காரணமாக, இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் கடந்த 10 நாட்களுக்குள் சடுதியாக அதிகரித்துள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை ரூபாயின் வெளிநாட்டுப் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளமையைக் கருத்திற்கொண்டு, இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலைகளை இன்று (20) முதல் உயர்த்துவதற்கு பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்கமைய, 400 கிராம் பால்மா பாக்கெட்டின் விலை 50 ரூபாவினாலும், 1 கிலோகிராம் பால்மா பாக்கெட்டின் விலை 125 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளது. புதிய விலையுடனான பால்மா பாக்கெட்டுகள் அடுத்த வாரம் சந்தைக்கு வரும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, டொலரின் மதிப்பு உயர்வால் ஏனைய அத்தியாவசியப் பொருட்களின் மொத்த விலைகளும் கடந்த 10 நாட்களுக்குள் பின்வருமாறு கணிசமாக உயர்ந்துள்ளதாக இறக்குமதியாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது:
அதன்படி, 10 நாட்களுக்கு முன்னர் 195 ரூபாவாக இருந்த ஒரு கிலோகிராம் இறக்குமதிச் சீனியின் மொத்த விலை, இன்று 220 ரூபாவாக உயர்ந்துள்ளது.
மேலும், இறக்குமதி செய்யப்படும் அரிசி வகைகளின் விலைகளும் கடந்த 10 நாட்களில் கணிசமாக அதிகரித்துள்ளன.
அதன்படி, 225 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் பொன்னி அரிசியின் மொத்த விலை 245 ரூபாவாகவும், 240 ரூபாவாக இருந்த வெள்ளை பொன்னி அரிசி ஒரு கிலோகிராமின் மொத்த விலை இன்று 265 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்களின் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது
