மின்சாரம் மற்றும் எரிபொருளுக்கான செலவுகளை முழுமையாக ஈடுசெய்யக்கூடிய விலை நிர்ணய முறையை மீண்டும் நிலைநிறுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க சர்வதேச நாணய நிதியத்திற்கு தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்திற்கு அனுப்பியுள்ள உத்தியோகபூர்வ கடிதத்திலேயே ஜனாதிபதி இதனைத் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டு வரும் விரிவுபடுத்தப்பட்ட நிதி வசதிக்கான ஐந்தாவது மற்றும் ஆறாவது மீளாய்வுகளை நிறைவு செய்து, அதற்கான அனுமதியை நாணய நிதியத்தின் நிர்வாகச் சபை கடந்த மே 27 ஆம் திகதி வழங்கியிருந்தது.
இதற்கமைய, இலங்கையின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்களுக்கு ஆதரவளிப்பதற்காக 695 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி இலங்கைக்குக் கிடைத்தது.
இதற்கு முன்னதாக, கடந்த மே 13 ஆம் திகதி நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க ஆகியோரின் கையொப்பங்களுடன் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளருக்கு கடிதமொன்று அனுப்பப்பட்டிருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
சர்வதேச நாணய நிதிய திட்டத்தின் ஆரம்பகட்ட முன்நடவடிக்கைகளில் ஒன்றான, செலவை ஈடுசெய்யும் மின்சாரம் மற்றும் எரிபொருள் விலை நிர்ணயத்தை மீண்டும் நிறுவுவதற்கு அரசாங்கம் செயல்பட்டு வருகின்றது.
எரிபொருள் மானியங்கள் உள்ளிட்ட ஏனைய நிவாரண நடவடிக்கைகள் 100 பில்லியன் ரூபாய் எல்லைக்கு உட்பட்டதாக அமையும் என்பதுடன், அவை செப்டம்பர் மாத இறுதிக்குள் செலுத்தி முடிக்கப்படும்.
சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தின் கீழ், நாட்டின் பொருளாதாரச் சீர்திருத்த செயல்முறைகளைத் தொடர்ச்சியாக முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கு அரசாங்கம் முழுமையாக அர்ப்பணிப்புடன் உள்ளது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் பின்வரும் முக்கிய கட்டமைப்புச் சீர்திருத்தங்களை நோக்கமாகக் கொண்டுள்ளதாக அக்கடிதத்தில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது:
வருவாயை அடிப்படையாகக் கொண்ட நிதி ஸ்திரத்தன்மை.
வலுவான சமூக பாதுகாப்பு வலையமைப்பை நடைமுறைப்படுத்துதல்.
நிதித்துறையின் சீர்திருத்தங்கள் மற்றும் செலவை ஈடுசெய்யும் ஆற்றல் விலை நிர்ணயம்.
அரசாங்கக் கடன் நிலைத்தன்மை மற்றும் விலை ஸ்திரத்தன்மையைப் பேணுதல்.
மாற்று விகிதங்களில் அதிக நெகிழ்வுத்தன்மையுடன் வெளிநாட்டு கையிருப்பை கட்டியெழுப்புதல்.
நிதித்துறையின் ஸ்திரத்தன்மை மற்றும் ஊழல் அபாயங்களைத் தடுப்பதற்கான உயர்மட்ட கட்டமைப்புச் சீர்திருத்தங்களை மேற்கொள்ளல்.
.jpeg)