இலங்கையில் தற்போது நிலவி வரும் மழையுடனான சீரற்ற காலநிலை காரணமாக 14 மாவட்டங்களைச் சேர்ந்த 17 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், மூவர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று மதியம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஏற்பட்டுள்ள அனர்த்தங்களினால் 4 ஆயிரத்து 622 குடும்பங்களைச் சேர்ந்த 17 ஆயிரத்து 736 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த அனர்த்தங்கள் காரணமாக இதுவரை மூவர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், சொத்துச் சேதங்களைப் பொறுத்தமட்டில் 8 வீடுகள் முழுமையாகவும், 357 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாவட்ட ரீதியில் அதிகளவிலான பாதிப்புகள் இரத்தினபுரி மற்றும் கொழும்பு மாவட்டங்களிலேயே பதிவாகியுள்ளன.
இதன்படி, இரத்தினபுரி மாவட்டத்தில் 1,057 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 912 பேரும், கொழும்பு மாவட்டத்தில் 1,569 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 845 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
