குடிநீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான திட்டங்களை விரைவுபடுத்தவும்

 



மக்களின் முதன்மையான பிரச்சினையாக உள்ள குடிநீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்குத் தேவையான திட்டங்களை விரைவாகக் கண்டறிந்து, அவற்றை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். 

மக்களின் தற்போதைய தேவைகள் குறித்து அவதானம் செலுத்தி திட்டங்களை தயாரிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்திய ஜனாதிபதி, மக்களுக்கு போதுமான குடிநீர் விநியோகத்தை உறுதிப்படுத்த முடியாமல் போவதால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டினார். 

தேசிய குடிநீர், சமூக நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் முகாமைத்துவத் திட்டங்களின் தற்போதைய நிலைமை, வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீடுகளின் முன்னேற்றம் மற்றும் தேவைகள், எதிர்காலத் திட்டங்கள் குறித்து ஆராய்வதற்காக தொடர்புடைய அதிகாரிகளுடன் இன்று (08) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கேற்ற போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இவ்வாறு பணிப்புரை விடுத்தார். 

குறித்த திட்டங்களை விரைவாகக் கண்டறிந்து, அவை ஆரம்பிக்கப்படக்கூடிய திகதி, தேவையான நிதி ஒதுக்கீடுகள் மற்றும் அவை நிறைவடையும் திகதி குறித்த அறிக்கையைத் தன்னிடம் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்திய ஜனாதிபதி, அதன்போது எக்காரணம் கொண்டும் நிதிப் பிரச்சினையை ஒரு தடையாகக் கருத வேண்டாம் எனவும், திட்டங்களைத் தயாரித்து அதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகள் குறித்த கோரிக்கைகளை முன்வைக்குமாறும் பணிப்புரை விடுத்தார். 

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, மொனராகலை, கண்டி, கம்பளை, அநுராதபுரம், வவுனியா, யாழ்ப்பாணம், அம்பாறை, மட்டக்களப்பு, பொலன்னறுவை உள்ளிட்ட மாவட்டங்களில் மக்களின் குடிநீர் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள மற்றும் திட்டமிடப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள், அவற்றின் முன்னேற்றம் மற்றும் அவற்றைச் செயற்படுத்தும்போது எழுந்துள்ள சிக்கல்கள் குறித்து ஜனாதிபதி இங்கு தனித்தனியாகக் கேட்டறிந்தார். 

கொழும்பு மாவட்டத்தில் பிரதான நீர் விநியோகக் குழாய்கள் பழுதடைந்துள்ளதால், மக்களுக்குப் போதுமான அளவு நீர் கிடைக்காத சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், அந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான திட்டங்கள் குறித்தும் அதிகாரிகள் இங்கு விளக்கமளித்ததுடன், அந்த செயற்பாடுகளில் வீதி அபிவிருத்தி அதிகார சபை, நீர் வழங்கல் சபை ஆகியவை சிறந்த ஒருங்கிணைப்புடனும் திட்டமிடலுடனும் செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார். 

அத்துடன், கொழும்பு மாவட்டத்தின் வெள்ளக் கட்டுப்பாட்டுக்கும் மற்றும் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்குமாக நடைமுறைப்படுத்தப்படவுள்ள வீ ஓயா (Wee Oya) நீர்த்தேக்கத் திட்டத்தை அடுத்த ஆண்டில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி இதன்போது அறிவுறுத்தினார். 

வடமத்திய மக எல மற்றும் வடமேல் கால்வாய் திட்டங்கள் குறித்து இங்கு கவனம் செலுத்தப்பட்டதுடன், வெலிகந்த, மெதிரிகிரிய மற்றும் லங்காபுர பகுதி மக்கள் எதிர்நோக்கும் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டிற்கு தீர்வுகாண்பதற்காக நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் ஆராயப்பட்டதுடன், இதன்போது, அதிக செலவு ஏற்படாத திட்டங்களை உள்நாட்டு நிதியைப் பயன்படுத்தி விரைவாக நிறைவு செய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டது. 

அத்தியாவசிய திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்ட காரணத்தால் சில திட்டங்கள் இடையில் நிறுத்தப்பட்ட போதிலும், அனைத்து திட்டங்களும் மக்களின் தேவைகளை இனங்கண்டு செயல்படுத்தப்படுபவை என்பதால், அவற்றை மிகவும் திட்டமிட்ட முறையிலும் முறைப்படியும் முன்னெடுத்து அதன் பலன்களை மக்களுக்கு பெற்றுக்கொடுப்பதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி இங்கு மேலும் சுட்டிக்காட்டினார்.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post