காலநிலையில் ஏற்பட்ட மாற்றத்தினை தொடர்ந்து நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மாலை வேளையில் பல இடங்களில் கடும் மழை பெய்து வருகின்றது.
ஹட்டன் பகுதியில் இன்று(12.5.2026) சுமார் 2.00 மணியளவில் பெய்த மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகின.
கால்வாய்கள் நிறைந்து கழிவு நீர் வீதிகளில் பெருக்கெடுத்து ஓடியதனால் பாடசாலை மாணவர்கள் உட்பட பொது மக்கள் வீதியில் நடந்து செல்ல முடியாது பெரும் சிரமங்களை எதிர் நோக்கினர்.
ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் ஹட்டன் வட்டவளை தியகலை கர்லினா,கினிகத்தேனை பிட்டவல ஆகிய பகுதிகளிலும் ஹட்டன் நுவரெலியா வீதியில் குடாகம,கொட்டகலை,சென்கிளையார்,தலவாக்கலை ரதல்ல நானுஓயா ஆகிய பகுதிகளில் மழையுடன் கடும் பனி மூட்டம் காணப்படுவதனால் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் சாரதிகளை எச்சரித்துள்ளனர்.
இதேவேளை ஹட்டன் கொழும்பு பிரதான வீதியிலும், ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியிலும் டிட்வா சூறாவளியில் ஏற்பட்ட மண்சரிவுகள் தற்போது தொடர் மழை காரணமாக மீண்டும் சரிவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதனால் மலையக வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மாலை வேளையில் தொடர்ந்தும் பெய்து வரும் மழை காரணமாக விவசாய தொழில் ஈடுபடுபவர்களும், அன்றாட கூலித்தொழிலில் ஈடுபடுபவர்களும் பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
