குட் டச், பேட் டச் பற்றி சொன்னதுமே: 42 வயது நபரை காட்டி தந்த திருவண்ணாமலை சிறுமி

 

திருவண்ணாமலை ஆரணியில் ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது. கல்விக்கூடங்கள் என்பது குழந்தைகளுக்கு எழுத்தறிவை மட்டும் போதிக்கும் இடம் கிடையாது, அவர்களின் பாதுகாப்பையும் சுயமரியாதையையும் உறுதி செய்யும் அரணாக விளங்க வேண்டும் என்பதற்கு சான்றாக இந்த சம்பவம் ஆரணியில் நடந்துள்ளது.. பள்ளி ஒன்றில் விழிப்புணர்வு வகுப்பு நடத்த சென்றபோது, இப்படியொரு பயங்கரம் வெளிவந்தள்ளது.

ஆரணி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பள்ளி ஒன்றில், கடந்த ஜூலை 23ம் தேதியன்று வழக்கம்போல வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அப்போது 8ம் வகுப்பு பயிலும் பெண் குழந்தைகளுக்கு"'நல்ல தொடுதல் மற்றும் கெட்ட தொடுதல்" (Good Touch and Bad Touch) குறித்த விழிப்புணர்வு வகுப்பை ஆசிரியை ஒருவர் எடுத்துக்கொண்டிருந்தார்.

குழந்தைகள் தங்களுக்கு நிகழும் அசாதாரணமான அல்லது தவறான தொடுதல்களை எப்படி அடையாளம் காண்பது, அத்தகைய சூழலில் பயப்படாமல் எப்படி உடனடியாக பெற்றோரிடமோ அல்லது ஆசிரியர்களிடமோ முறையிடுவது என்பது குறித்தெல்லாம் தெளிவாக கூறினார்..

அதுமட்டுமல்ல, "உங்களில் யாருக்கேனும் இதுபோன்று அசம்பாவிதம் ஏற்கனவே நடந்திருந்தாலோ அல்லது, இப்போது நடந்து கொண்டிருந்தாலோ பயப்படாமல் என்னிடம் தனியாக வந்து சொல்லலாம்" என்றும் நம்பிக்கை அளித்தார்.

வகுப்பு முடிவடைந்த கொஞ்ச நேரத்தில், 8ம் வகுப்பு பயிலும் 13 வயது சிறுமி ஒருவர் மிகுந்த தயக்கத்துடனும், கண்களில் தேங்கிய கண்ணீருடனும் சம்பந்தப்பட்ட ஆசிரியையிடம் சென்றார்.. உடனே ஆசிரியை அந்த மாணவிக்கு தைரியத்தை தந்து, என்ன நடந்தது என்று கேட்டுள்ளார். அப்போது அந்த 8ம் வகுப்பு மாணவி சொன்னதை கேட்டு அதிர்ச்சியடைந்தார்

அதாவது கடந்த 2021ம் ஆண்டு, சம்பந்தப்பட்ட மாணவி, பள்ளியில் 3ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தாராம்.. அப்போது 8 வயது.. பள்ளி வளாகத்தின் அருகே தோழிகளுடன் விளையாடிக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த நபர் ஒருவர், சிறுமியின் கையைப் பலவந்தமாகப் பற்றி இழுத்துச் சென்று, தன் வீட்டில் வைத்துப் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டிருக்கிறார்..

சிறுமி வலியாலும் பயத்தாலும் கதறி அழுதபோது, "இதைப்பற்றி யாராவது வெளியே சொன்னால் உன்னைக் கொலை செய்துவிடுவேன்" என்று மிரட்டியும் உள்ளார்.. இதனால் பயந்து போன சிறுமி, இதை பற்றி வெளியில் யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார்.. ஆனால் 8 வயதில் நடந்த இந்த அதிர்ச்சியிலிருந்தும் வேதனையிலிருந்தும் மீள முடியாமலும் தவித்து வந்துள்ளார்.

இதைக் கேட்டதுமே ஆசிரியை பதறிப்போய்விட்டார்.. உடனடியாக சிறுமியின் அம்மாவை பள்ளிக்கு வரவழைத்து விவரத்தை சொன்னார்.. தன் மகளுக்கு நேர்ந்த கொடுமையைக் கேட்டு கண்ணீர் விட்டு அந்த தாய் கதறி அழுதார்.. அந்த ஆசிரியையின் வழிகாட்டுதலின்படி, சிறுமியின் தாயார் உடனடியாக ஆரணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவலர்கள், குற்றவாளியைக் கண்டறியும் நடவடிக்கையில் இறங்கினார்கள்... சிறுமி சுட்டிக்காட்டியதன் அடிப்படையில், ஆரணி டவுன் கொசப்பாளையம் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ஐயப்பன் (42) என்பவர்தான் இந்த கொடூரமான செயலில் ஈடுபட்டவர் என்பது உறுதி செய்யப்பட்டது.

உடனடியாக செயல்பட்ட போலீசார், ஐயப்பனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பிறகு திருவண்ணாமலை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், நீதிபதியின் உத்தரவின்பேரில் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

5 ஆண்டுகளுக்கு முன்பு 3ம் வகுப்பில் நடந்த கொடூரத்தை, ஆசிரியை ஏற்படுத்திய விழிப்புணர்வால் 8ம் வகுப்பில் மாணவி தைரியமாக வெளிப்படுத்தி குற்றவாளியை சட்டத்தின் முன் நிறுத்தியுள்ள இந்தச் சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதேவேளையில் விழிப்புணர்வின் அவசியத்தையும் உணர்த்தியுள்ளது....!!!