உத்தரப் பிரதேசம், வாராணசியில் உள்ள தனியார் பள்ளியில் 5 வயதுக் குழந்தைக்குப் பிறப்புறுப்பில் சூடு வைத்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பாண்டேபூரில் உள்ள சருன் சோனி ஆரம்ப பள்ளியில் 5 வயதுக் குழந்தை படித்து வந்துள்ளது. ஜூலை 24 அன்று பள்ளி முடித்து வீடு திரும்பிய குழந்தைப் பிறப்புறுப்பில் வலி உள்ளதாகத் தெரிவித்துள்ளது. சோதித்துப் பார்த்த தாய்க்கு அதிர்ச்சி காத்திருந்தது.
பின்னர், விசாரித்ததில் குழந்தை உண்மையைச் சொல்லியுள்ளது. கழிவறையைப் பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டதால் சிறுவன் தனது ஆடையிலேயே சிறுநீர் கழித்துள்ளான். இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியை பிரீத்தி குஷ்வாஹா அந்தச் சிறுவனை வேறொரு அறைக்கு அழைத்துச் சென்று, கேஸ் அடுப்பில் கத்தியைச் சூடாக்கி, அதைக் கொண்டு அவனது பிறப்புறுப்பில் சூடு வைத்துள்ளார்.
ஜூலை 25 அன்று தனது மனைவி, மகனுடன் பள்ளி முதல்வர், நிர்வாகத்திடம் புகார் அளிக்கச் சென்றதாகவும், ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் காவல்துறையை அணுகியதாகவும் குழந்தையின் தந்தை தெரிவித்தார்.
இதையடுத்து, லால்பூர்-பாண்டேபூர் காவல் நிலையத்தில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்துக்கு சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
இது மிகவும் மோசமான செயல். இந்த அதிர்ச்சிகரமான தாக்கம் அந்தச் சிறுவனின் வாழ்நாள் முழுவதும் நீடிக்கக்கூடும்.
ஆசிரியர்கள் குழந்தைகளை இரக்கத்துடனும் மனிதாபிமானத்துடனும் நடத்த வேண்டும். உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
