டிப்பர் வாகனம் மோதியதில் தாய் உயிரிழந்ததுடன், அவரது இரண்டு மகன்களும் படுகாயமடைந்ததாக தம்புள்ள பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரண்டு மகன்களும் தம்புள்ள ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தம்புள்ள-மாத்தளை பிரதான சாலையில் உள்ள கப்புவத்த பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர், தம்புள்ள, கப்புவத்த பகுதியைச் சேர்ந்த, நான்கு பிள்ளைகளின் தாயான 46 வயது டி.எம். திலானி அரோஷா ஆவார்.
அவரது 19 மற்றும் 14 வயதுடைய இரண்டு மகன்களும் விபத்தில் காயமடைந்தனர். மூத்த மகன் தம்புள்ள மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குவைத்தில் வீட்டுப் பணிப்பெண்ணாகப் பணியாற்றிய பின்னர், உயிரிழந்த நான்கு பிள்ளைகளின் தாய் எட்டு நாட்களின் முன்னரே இலங்கை திரும்பியதாக உறவினர்கள் கூறுகின்றனர்.
