நீதி அமைச்சர் உடனே பதவி விலக வேண்டும்: இப்படி பீரிஸ் வலியுறுத்து

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவத்துக்குப் பொறுப்பேற்பதாக அறிவித்துள்ள நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார, சர்வதேச சம்பிரதாயங்களுக்கு மதிப்பளித்து தனது பதவியை உடனடியாக இராஜிநாமா செய்ய வேண்டும் என்று முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த விவகாரம் குறித்துக் கடுமையான கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது:-

"நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான வன்முறைச் சம்பவத்துக்குப் பொறுப்பேற்பதாக நீதி அமைச்சர் பகிரங்கமாகக் கூறியுள்ளார். அவ்வாறு அவர் உண்மையாகவே பொறுப்பேற்பதாக இருந்தால், தனது அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும். அதுவே உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச சம்பிரதாயமாகும். அதை விடுத்து, பதவியில் நீடித்துக்கொண்டே 'பொறுப்பேற்கிறேன்' என்று வாய் வார்த்தையாகக் கூறுவது எவ்வகையிலும் ஏற்புடைய விடயம் அல்ல.

இதற்குச் சான்றாக, இந்தியாவில் கடந்த காலங்களில் பாரிய ரயில் விபத்துக்கள் ஏற்பட்ட தருணங்களில், அதற்குத் துறைசார் அமைச்சர்கள் பொறுப்பல்லாதபோதும், பொதுநலவாய சம்பிரதாயங்களுக்கு மதிப்பளித்துத் தங்களது பதவிகளைப் நாடாளுமன்றத்தில் இராஜிநாமா செய்த வரலாறுகள் உள்ளன.

அதே உன்னதமான அரசியல் நாகரிகத்தையும், வழியையும் எமது நாட்டு நீதி அமைச்சரும் இந்தச் சந்தர்ப்பத்தில் பின்பற்ற வேண்டும். வெறும் அறிக்கைகளுடன் நின்றுவிடாமல், உடனடியாக அவர் பதவி விலக வேண்டும்.

இலங்கை அரசியல் வரலாற்றில் இவ்வாறான பொறுப்புக்கூறல்கள் மிக முக்கியம் என்பதால், அரசு இந்த விவகாரத்தில் சர்வதேச ரீதியிலான ஒழுக்கநெறியைக் கடைப்பிடிக்க வேண்டும்." - என்றார்.