திண்ணையில் விடிய விடிய கணவன் செய்த காரியம்: பொறுமையிழந்த மனைவி!

கிராமமே தற்போது பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளது. கைத்தறி நெசவாளியான ரமேஷ், தனது மனைவியுடன் ஏற்பட்ட தொடர் தகராறின் உச்சகட்டமாக, உயிரிழந்து கிடந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடிப்பழக்கத்திற்கு அடிமையான கணவன், மது அருந்த பணம் கேட்டு மனைவியை வதைத்ததால், ஆத்திரமடைந்த மனைவி எடுத்த ஒரு விபரீத முடிவு ஒட்டுமொத்த குடும்பத்தையும் சீரழித்துள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூர் அருகே உள்ளது மூக்கனூர் என்ற கிராமம்.. இங்கு 38 வயதான ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி பெயர் சசி பிரியா..

ரமேஷூக்கு மதுப்பழக்கம் உள்ளதாக தெரிகிறது.. அத்துடன் தண்ணி அடித்துவிட்டு, சசி பிரியாவுடன் தகராறு செய்வதையும் வழக்கமாக வைத்துள்ளார்.. இதனால் தம்பதிக்குள் தகராறு வெடித்து வந்துள்ளது

இந்நிலையில், கடந்த 10-ம் தேதி, வீட்டு திண்ணையில் உட்கார்ந்து நள்ளிரவு 2 மணிக்கு மது அருந்த துவங்கினாராம் ரமேஷ்.. விடிகாலை வரை குடித்து கொண்டேயிருந்தாராம்.. அத்துடன் இன்னமும் மது குடிக்க பணம் கேட்டு மனைவியை மிரட்டி உள்ளார்.. தன்னிடம் பணம் இல்லை என்று சசி பிரியா சொல்லவும், மனசாட்சியே இல்லாமல் சரமாரியாக அடித்து துன்புறுத்தியதாக தெரிகிறது..

பொறுத்து பொறுத்து பார்த்து பொறுமையிழந்த சசி பிரியா, ஒருகட்டத்தில் கணவரின் அடிஉதை பொறுக்காமல் ஆத்திரமடைந்தார்.. உடனே தன்னுடைய கழுத்தில் இருந்த துப்பட்டாவை எடுத்து ரமேஷின் கழுத்தைச் சுற்றி பலமாக இறுக்கி விட்டார். மேலும் அவரது வாய் மற்றும் மூக்கை பொத்தி கீழே தள்ளியதில், ரமேஷ் அருகில் இருந்த கட்டிலின் மீது விழுந்து மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கணவர் இறந்ததை உறுதி செய்த சசி பிரியா, இந்த கொலையை மறைக்க முயன்றார். இதற்காக சிறிது நேரத்தில் ரமேஷின் அண்ணன் கார்த்திகேயனுக்கு போன் செய்து, தனது கணவருக்கு திடீரென உடம்பு சரியில்லாமல் போய்விட்டது, உடனே கிளம்பி வாங்க என்று கதறியுள்ளார்.

இதைக்கேட்டு கார்த்திகேயன், பதறியடித்துக்கொண்டு வீட்டுக்கு வந்துள்ளார்.. ஆனால், கட்டிலுக்கு அடியில் பாயில் அசைவற்று கிடந்த ரமேஷைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்..

உடனடியாக ரமேஷை மூக்கனூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றார்.. அங்கு பரிசோதித்த டாக்டர், ரமேஷின் கழுத்திலும் முகத்திலும் கீறல்கள் வந்துள்ளதை காட்டி, உடனடியாக மேல் சிகிச்சைக்காக அன்னூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தினார். அதன்படியே சிகிச்சைக்காக அன்னூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

முதலில் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்த அன்னூர் போலீசார், ரமேஷின் அண்ணன் கார்த்திகேயன் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணையை வேறு கோணத்தில் ஆரம்பித்தனர். அப்போதுதான், சசி பிரியா போலீசாரிடம் தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டார்..

தண்ணி அடிக்க தினந்தோறும் பணம் கேட்டு சித்ரவதை செய்ததாலும், அந்த அடிதடியால் ஏற்பட்ட ஆத்திரத்திலும் தான் கணவனைக் கொன்றதாக வாக்குமூலம் தந்தார்..

இதைத் தொடர்ந்து, சந்தேக மரணமாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. சசி பிரியாவைக் கைது செய்த அன்னூர் போலீசார், அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த விவகாரம் கோவையில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது என்றாலும், இந்த மது போதை இன்னும் எத்தனை உயிர்களை காவு வாங்க போகிறதோ??