பெங்களூரில் கடந்த 6 மாதமாக பெண்களின் உள்ளாடைகளை திருடி அதனை அணிந்து வந்த 'சைக்கோ' நபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இந்த நபர் சிக்கியது எப்படி? அவரை பிடிக்க பெண்கள் செய்த சம்பவம் குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
பெங்களூர் ஒய்சாலா நகரில் கடந்த சில மாதங்களாக பால்கனி, வீட்டின் பின்புறத்தில் உலர வைக்கப்பட்டு இருக்கும் பெண்களின் உள்ளாடைகள் திருடுப்போய் வந்தன. பல்வேறு ஆடைகள் இருந்தாலும் கூட குறிப்பாக பெண்களின் உள்ளாடைகள் மட்டுமே மாயமாகி வந்தது.
குறிப்பாக ஒருமுறை காணாமல் போகும் உள்ளாடைகள் சில நாட்கள் கழித்து மீண்டும் அதே இடத்தில் கிடைக்கும். ஆனால் அதற்கு பதில் வேறு உள்ளாடைகள் மாயமாகி இருக்கும்.
ஒய்சாலா நகரில் உள்ள சில வீடுகளில் இந்த சம்பவம் தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தது. இதனால் அந்த பகுதி மக்கள் இந்த நபரை கண்டுபிடிக்க வேண்டும் என்று முடிவு செய்தனர். அதன்படி அவர்கள் பால்கனி பகுதிகளில் ஆடைகள் உலர வைக்கப்படும் இடத்தை நோக்கி ரகசிய கேமராக்களை கடந்த 1ம் தேதி பொருத்தி வைத்தனர். இதன்மூலம் மர்மநபரை கண்டுபிடிக்க அவர்கள் முடிவெடுத்தனர்.
ரகசிய கேமரா இருப்பதை அறியாத மர்மநபர் ஜூலை 2ம் தேதி அதிகாலை சுமார் 3 மணிக்கு வழக்கம்போல் ஒரு வீட்டிற்குள் நுழைந்தார். அவர் பால்கனியில் உலர வைக்கப்பட்டு இருந்த பெண்களின் உள்ளாடை திருடி அணிந்து மோசமாக நடந்து கொண்டார். வக்கிர புத்தியுடன் அவரது செயல்கள் இருந்தன.
இது அங்குள்ள ரகசிய கேமராவில் பதிவானது. இதனை மறுநாள் பார்த்த பெண்கள் சம்பவம் தொடர்பாக இந்திரா நகர் போலீசில் புகார் செய்தனர். ரகசிய கேமராவில் பதிவான நபரின் வீடியோவை போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அதில் பதிவான உருவத்தை வைத்து விசாரணை மேற்கொண்டு அந்த நபரை கைது செய்தனர்.
விசாரணையில் அவரது பெயர் சதான் உசேன் என்பதும், பெண்களின் உள்ளாடைகளை திருடி அணிந்து வரும் வினோத பழக்கத்தை வைத்திருப்பதும் தெரியவந்தது. இந்த பழக்கத்தை கைவிட முடியாமல் தவிப்பதால் அடிக்கடி அதிகாலை வேளைகளில் வீடுகளுக்கு சென்று பெண்களின் உள்ளாடைகளை திருடி அணிந்து கொள்வதாக தெரிவித்துள்ளனர். இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
