உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் முக்கிய தகவல்களை வெளிப்படுத்தியிருந்த முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவின் மரணம் பாரிய சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.
குருநாகலில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது:-
"இலங்கை வரலாற்றில் சேவையிலிருந்து ஓய்வுபெற்ற பொலிஸ்மா அதிபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார் என்று கூறப்படும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவின் இந்த மரணம் பெரும் சந்தேகத்துக்குரியது. சர்ச்சைக்குரிய சம்பவங்களுடன் தொடர்புடைய சாட்சியாளர்கள் தொடர்ச்சியாக மர்மமான முறையில் உயிரிழக்கின்றமை சமூகத்துக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தலாகும்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் சி.டி. விக்கிரமரத்ன பல முக்கிய விடயங்களை வெளிப்படுத்தியிருந்தார். தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு அவருக்குத் தனிப்பட்ட பிரச்சினைகள் எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை. இவ்வாறான பின்னணியில், இந்த மரணத்தைத் தற்கொலை என்று முத்திரை குத்த ஒரு தரப்பினர் முயற்சிக்கின்றனர்.
தற்போது சேவையில் உள்ள மற்றும் ஓய்வுபெற்ற அரச சேவையாளர்கள் கடும் அழுத்தங்களுக்கு உள்ளாக்கப்படுகின்றமையை எம்மால் அவதானிக்க முடிகின்றது. இது மிகவும் முறையற்றதொரு செயற்பாடாகும். இந்த மரணம் குறித்து அரசு உரிய விளக்கத்தை நாட்டு மக்களுக்கு வழங்க வேண்டும்." - என்றார்.
