சிறைச்சாலை மோதல், கைதிகள் மரணம்: மனித உரிமைகள் ஆணைக்குழு அவசர விசாரணை

அரச பாதுகாப்பில் இருந்த கைதிகள் மியுற்றுள்ளமை மற்றும் கடமைகளில் ஈடுபட்டிருந்த சிறைச்சாலை அதிகாரிகள் 07 பேர் உயிரிழந்த சம்பவமானது மிகவும் கவலைக்குரியதும் துரதிர்ஷ்டவசமானதுமாகும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நிமல் ஜி. புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

இவ்வாறானதொரு பின்னணி உருவாவதற்கான பின்னணி மற்றும் இச்சம்பவம் எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்து முழுமையான விசாரணைகளை முன்னெடுக்க ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இதற்காக ஆணைக்குழுவின் ஆராய்ச்சி மற்றும் விசாரணைப் பிரிவு, மறுஆய்வு மற்றும் கண்காணிப்புப் பிரிவு ஆகியவற்றைச் சேர்ந்த சட்ட அதிகாரிகள் மற்றும் மனித உரிமைகள் அதிகாரிகள் அடங்கிய பல விசேட குழுக்கள் தற்போது களமிறக்கப்பட்டு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்தார்.

இதற்கமைய, நேற்று நீர்கொழும்பு போதனா வைத்தியசாலைக்குச் சென்ற ஆணைக்குழுவின் குழுவொன்று, அங்கு சிகிச்சை பெற்றுவரும் கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளுடன் கலந்துரையாடி தகவல்களைப் பெற்றுக்கொண்டுள்ளது.

அத்துடன், கைதிகள் வேறு சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்படும் போது அவர்கள் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுவதாக கைதிகள் நலன்புரி அமைப்புகளிடமிருந்து தொடர்ந்து புகார்கள் கிடைத்து வருவதன் காரணமாக, இன்றைய தினமும் அங்குணகொளபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாத்தறை மாவட்டத்திற்கு பொறுப்பான அதிகாரிகளும், கண்டி போகம்பறை சிறைச்சாலைக்கு கண்டி அலுவலக அதிகாரிகளும் விசாரணைகளுக்காகச் சென்றுள்ளனர்.

இதேவேளை, வெலிக்கடை சிறைச்சாலைக்கு ஆணைக்குழுவின் தலைமை அலுவலக அதிகாரிகள் இன்று நேரில் சென்று அங்குள்ள அதிகாரிகளுடன் கலந்துரையாடி, நிலைமை மேலும் மோசமடைவதைத் தடுப்பதற்கும், அமைதியைப்பேண வேண்டிய முறைகள் குறித்தும் ஆலோசித்து தகவல்களைத் திரட்டி வருகின்றனர்.

இச்சம்பவம் நடப்பதற்கு முன்னரே, ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள விசேட சட்ட அதிகாரங்களின் கீழ் சிறைச்சாலைகளில் வழக்கமான சோதனைகள் நடத்தப்பட்டு, அங்கு காணப்படும் கடுமையான இடநெருக்கடி மற்றும் குறைபாடுகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஏற்கனவே அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக ஆணையாளர் சுட்டிக்காட்டினார்.

கைதிகளுக்கு படுத்து உறங்குவதற்குக் கூட போதிய இடவசதிகள் இல்லாத நிலையில், இருக்கும் மட்டுப்படுத்தப்பட்ட இடவசதியைக் கொண்டே சிறைச்சாலை அதிகாரிகள் தற்போதைய நிலைமையை மேலாண்மை செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எனவே, தற்போதைய சிறைச்சாலை கட்டமைப்பு முழுமையான மறுசீரமைப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும் என ஆணைக்குழு வலியுறுத்துகிறது.

குறிப்பாக, போதைப்பொருள் கடத்தல்காரர்களும் சாதாரண குற்றவாளிகளும், பாரிய குற்றங்களுடன் தொடர்புடையவர்களும் அபராதப் பணத்தைச் செலுத்த முடியாதவர்களும் ஒரே இடத்தில் அடைக்கப்பட்டுள்ளதால், கைதிகள் சிறைக்குள் மேலும் மோசமான குற்றச் செயல்களுக்கு பழகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நீதிமன்றத்தினால் விதிக்கப்படும் அபராதப் பணத்தைச் செலுத்த முடியாத ஏழை மக்கள் தங்களின் வறுமையின் காரணமாகவே சிறை செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய ஆணையாளர், இந்த நிலைமைகளை மாற்றுவதற்கு கைதிகளை வகைப்படுத்தும் முறையான வேலைத்திட்டமொன்று அவசியம் என்றும், இது குறித்து ஆராய அரசாங்கமும் ஒரு குழுவை நியமித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.


மேலும், அபராதப் பணத்தை தவணை முறையில் செலுத்துவதற்கான சட்டத் திருத்தங்களை மேற்கொள்வது சாத்தியமா என்பது குறித்தும், தற்போதைய நீதித்துறை சார்ந்த சட்டவிதிகளில் சில மாற்றங்களைக் கொண்டு வருவது குறித்தும் அதிகாரிகள் அவதானம் செலுத்த வேண்டும் எனவும் ஆணையாளர் நிமல் ஜி. புஞ்சிஹேவா மேலும் தெரிவித்துள்ளார்.