அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் சாரதிகள் மற்றும் பயணிகள் அனைவரும் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஆசனப்பட்டி அணியும் வசதி இல்லாத பழைய வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த சலுகைக்காலம் எதிர்வரும் செப்டம்பர் 19ஆம் திகதியுடன் நிறைவடைகின்றது.
அதற்கமைய, செப்டம்பர் 19ஆம் திகதி முதல் அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் அனைத்து வாகனங்களிலும் ஆசனப்பட்டி பொருத்தப்பட்டிருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன், சாரதிகள் மற்றும் பயணிகள் அனைவரும் ஆசனப்பட்டி அணிந்திருப்பது அவசியமாகும் என பொலிஸ் தெரிவித்துள்ளது.
இந்த விதிமுறை மிகக் கண்டிப்பான முறையில் நடைமுறைப்படுத்தப்படும் என்றும், ஆசனப்பட்டி அணியாமல் பயணிப்பவர்களுக்கு 1,000 ரூபா அபராதம் விதிக்கப்படும் என்றும் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அதிவேக நெடுஞ்சாலை பஸ்களில் ஆசனப்பட்டி அணியாமல் பயணிக்கும் பயணிகளிடம் இருந்தும் தண்டப்பணத்தை அறவிடுவதற்கான சட்ட ஏற்பாடுகள் உள்ளன என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஆசனப்பட்டி பொருத்தப்படாத வாகனங்களுக்கு வழங்கப்பட்ட சலுகைக்காலம் செப்டம்பர் 19ஆம் திகதியுடன் முடிவடைவதாக வீதிப் பாதுகாப்புக்கான தேசிய சபையின் தலைவர் மஞ்சுள குலரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கை 2025ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் திகதி வெளியிடப்பட்ட 2455/29 இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைவாக அமுல்படுத்தப்படுகிறது.
சாரதிகள் மற்றும் பயணிகள் ஆசனப்பட்டி அணியாதமையால் ஏற்படும் வீதி விபத்து மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டியுள்ள பொலிஸ், உயிர்களைப் பாதுகாக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
