உறவினர் வீட்டில் நடந்த பெரும் சோகம்: 3 வயது சிறுமியின் உயிரைப் பறித்த இரசாயன திரவம்!

வவுனியாவிலிருந்து கம்பளைக்கு உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்த 3 வயது சிறுமி ஒருவர், இரசாயன திரவத்தை பருகி உயிரிழந்துள்ளார்.

வவுனியா, செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த குறித்த சிறுமி, தனது பெற்றோருடன் கம்பளை, புப்புரஸ்ஸ – டெல்டா தோட்டத்தில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தார்.

இதன்போது, வீட்டில் வைக்கப்பட்டிருந்த ‘ஹைட்ரஜன் பெரோக்சைட்’ (Hydrogen Peroxide) என்ற இரசாயன திரவத்தை தண்ணீர் என நினைத்து சிறுமி பருகியதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, உடல்நலம் பாதிக்கப்பட்ட சிறுமி உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சிறுமியின் உடலம் மீதான பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், இரசாயன திரவத்தைப் பருகியமையே மரணத்திற்கான காரணம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பிரேதப் பரிசோதனையின் பின்னர் சிறுமியின் உடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.