தற்போது நிலவி வரும் அதிக வெப்பத்துடன் கூடிய வானிலை காரணமாகப் பல்வேறு உடல்நலக் கோளாறுகள் ஏற்படக்கூடும் என்பதால் பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என விசேட மருத்துவர் சமல் சஞ்சீவ எச்சரித்துள்ளார்.
பரீட்சைகளுக்குச் செல்லும் மாணவர்களுக்குப் பெற்றோர் போதுமான அளவு சுத்தமான குடிநீரைக் கொடுத்து அனுப்ப வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அதிக வெப்பநிலை காரணமாகப் பரீட்சை மண்டபங்களில் மாணவர்களுக்கு அதிகளவிலான வியர்வை, மயக்கம், தலைச்சுற்றல், குமட்டல், வாந்தி, கடுமையான தலைவலி மற்றும் தசைப்பிடிப்பு போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே, பரீட்சை நிலையங்களில் மாணவர்களுக்குக் காற்றோட்டமான சூழலை ஏற்படுத்திக் கொடுப்பது அவசியமாகும்.
அதிக வெப்பநிலை நிலவும் இடங்களுக்குப் பயணம் செய்யும் போதும், சூரிய வெப்பத்தில் நேரடியாகச் செயற்படும் போதும் மயக்கம், தலைச்சுற்றல், தசைப்பிடிப்பு, தலைவலி மற்றும் பார்வைக் கோளாறுகள் ஏற்படக்கூடும்.
வெயிலில் நீண்டநேரம் நேரடியாக இருப்பதைத் தவிர்ப்பது நல்லது; அவ்வாறு செய்யாதபட்சத்தில் இதய நோய் தொடர்பான பாதிப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது,.
மேலும், அதிக வெப்பநிலை காரணமாக மன அழுத்தம், அதிகக் கோபம் மற்றும் வன்முறை எண்ணங்கள் ஏற்படக்கூடும் என்பதுடன், வாகனம் செலுத்துபவர்களுக்கு விபத்துகள் ஏற்படும் அபாயமும் அதிகம் என்பதால் கவனமாக இருக்குமாறு விசேட மருத்துவர் சமல் சஞ்சீவ அறிவுறுத்தியுள்ளார்.
