மொபட்டில் சென்ற இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபரை கண்காணிப்பு கேமரா மூலம் போலீசார் தேடி வருகின்றனர். சென்னை கொடுங்கையூர் பகுதியை சேர்ந்தவர் 23 வயது இளம்பெண். இவர் நர்சிங் முடித்துவிட்டு பகுதி நேரமாக தனியார் நிறுவனத்தில் டெலிவரி வேலை செய்து வருகிறார்.
நேற்றிரவு 11 மணி அளவில் கொடுங்கையூர், தண்டையார்பேட்டை நெடுஞ்சாலை மேம்பாலம் வழியாக மொபட்டில் சென்றபோது அவரை பின்தொடர்ந்து வந்த நபர் திடீரென அந்த பெண்ணை மறித்து பாலியல் தொந்தரவு கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குபதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து இளம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபரை தேடி வருகின்றனர்.
